குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், தேர்தல் நடைபெறாமல், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். தேர்தல் நடைபெற்றால், குடியரசுத் தலைவரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பர்.

இந்நிலையில் இன்று, தலைநகர் டெல்லியில், எதிர்க்கட்சிகள் சார்பில், குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில், எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக நிறுத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என்றும், அவருக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட, சரத் பவார், பரூக் அப்துல்லா, கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர் மறுப்பு தெரிவித்த நிலையில், பொது வேட்பாளராக, யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆளும் பாஜக தரப்பில் இருந்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த யஷ்வந்த் சின்ஹா?

பீகார் மாநிலம், பாட்னாவில் 1937 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு நிலிமா சின்ஹா என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அரசியல் அறிவியலில் 1958 முதுகலை பட்டம் பெற்றார். பாட்னா பல்கலைக்கழகத்தில் 1962 ஆம் ஆண்டு வரை அரசியல் அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு பயிற்றுவித்தார்.

பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான இவர், பல்வேறு முக்கியப் பொறுப்புகளை தனது பதவிக் காலத்தில் வகித்திருக்கிறார். பின்னர், ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். யஷ்வந்த் சின்ஹா பாஜகவில் இருந்தபோது, மத்திய நிதி அமைச்சராகவும், வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர், பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.