வேதாந்தாவின் விற்பனை முடிவுக்குப் பின்னால்… ஸ்டெர்லைட் ஆலை இனி?

தூத்துக்குடியில் கடந்த நான்கு ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1992-ம் ஆண்டு ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் காப்பர் உற்பத்திக்காக வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் தொடங்கிய ஸ்டெர்லைட் ஆலைக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். ஆரம்பத்தில் தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஒரு தளத்தை வாடகைக்கு எடுத்து அலுவலகம் செயல்பட்டது. பின்னர் சிப்காட் வளாகத்தில் பல ஏக்கர் பரப்பளவில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் கட்டப்பட்டு, 1996 முதல் காப்பர் உற்பத்தி தொடங்கப்பட்டது.

ஆலை தொடங்கப்படுவதற்கு முன்னரே, இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கூறி மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து விரட்டப்பட்ட இந்த ஆலை தமிழ்நாட்டிலிருந்தும் விரட்டப்பட வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து தூத்துக்குடிக்கு நடைப்பயணம் மேற்கொண்டார்.

தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இந்த ஆலைக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் 2018 மே 22-ம் தேதி ஆலை விரிவாக்கத்துக்குத் தடை கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்த பொதுமக்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியதால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. மே 28-ம் தேதி அப்போதைய தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார்.

ஸ்டெர்லைட் ஆலை

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நீதிமன்றங்கள் மூலம் ஆலை நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதனால் இனி ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழகத்தில் திறக்க முடியாது என்று முடிவு செய்த நிர்வாகம், ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தாமிர உருக்கு வளாகம், கந்தக அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் என 10 பிரிவுகள் விற்பனைக்கு வருவதாக விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் கேபிடல் என்ற நிறுவனத்தின் மூலம் இந்த விற்பனைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்த ஆலையை வாங்கத் திறன் படைத்த தரப்பினர் வருகிற ஜூலை 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் (சட்ட ஆலோசகர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு), அவர்களிடன் பேசிய போது, “உச்ச நீதிமன்ற வழக்கில் வெற்றி பெறுவதற்கான உத்தியாகத் தந்திரமாகச் செயல்படுகிறது ஸ்டெர்லைட் நிறுவனம். இதில் A,B,C- என எந்த நபர் நடத்துகிறார் என்பது பிரச்னை கிடையாது. காப்பர் பெருவீத அளவில் உற்பத்தி செய்தால் அருகில் உள்ள மக்களுக்கு, சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு என்பது தான் பிரச்னை. இதை உச்ச நீதிமன்றம் எல்லா விதத்திலும் விசாரித்து மக்களுக்குப் பாதிப்பு என்று உறுதி செய்து வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை

உச்ச நீதிமன்றத்திலும் இந்த நிறுவனம் பராமரிப்புக்கு வாங்கிய உத்தரவு கூட தள்ளுபடி ஆகிவிட்டது. இந்த சூழலில் தான் வழக்கை நடத்தினால் எதிர்மறையாக வரும் என்கிற நிலையில் வேறு ஒரு ஆட்களுக்கு பினாமியாகப் பங்குகளை மாற்றிவிட்டு அந்த நபர்கள் வாங்குவது போல் காட்டி, அந்த நிறுவனம் நீதிமன்றத்தில், `நாங்கள் புதிதாக வாங்கி இருக்கிறோம். சரியாக இனி செயல்படுவோம். இனி எந்த பிரச்னையும் வராது’ என்று இவர்கள் செய்த குற்றங்களுக்கும், விதிமீறல்களுக்கும் புதிய நிறுவனம் பதில் சொல்வதிலிருந்து தப்பிக்க வைக்கும் உத்தியைத் தான் செய்ய முன் வந்துள்ளனர். விதி மீறினால் என்ன வேண்டுமானாலும் நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னால் நீதிமன்றத்தில் ஓரளவு சமாளிக்க முடியும் என்கிற முயற்சியை கார்ப்ரேட் தந்திரமாகச் செய்துள்ளது” என்கிறவர்,

“தமிழக அரசு, சிப்காட்டிலிருந்து நிலத்தைக் கொடுத்து, பிரச்னை என்று வந்த பின் அரசாணை போட்டு மூடியுள்ள நிலையில், அரசாங்கத்தின் எந்த அனுமதியும் வாங்காமல் விற்பனைக்கு என்று எப்படிச் சொல்லலாம்? அதேபோல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அங்கேயும் அனுமதி வாங்காமல் அறிவித்தது எப்படி?” என்கிற அடுக்கடுக்கான கேள்வியினை முன் வைத்தார். தொடர்ந்து, “ஸ்டெர்லைட் ஆலை விற்பனை என்று இவர்கள் அறிவித்திருப்பது உட்சபட்ச கார்ப்ப்ரேட் விதி மீறல். தமிழக அரசும், நீதிமன்றமும் இந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டு” என்கிற கோரிக்கையினை முன் வைக்கிறார்.

வழக்கறிஞர் சே.வாஞ்சி நாதன்

“போபாலில் யூனியன் கார்ப்பரேட் நிறுவனத்தினால் ஏற்பட்ட பாதிப்பு 25 வருடம் கழித்தும் கூட இன்னும் இருக்கிறது. அங்கு நீதியும் கிடைக்கவில்லை, நிவாரணமும் கிடைக்கவில்லை. அதன் பின் வேறொரு நிறுவனம் வாங்கியதாகச் சொன்னார்கள். அதே நிலைதான் இங்கும். ஸ்டெர்லைட் செய்த பாதிப்புக்களுக்கு எல்லாம் யார் பொறுப்பு. கிரிமினல் ஆக்ட், நிவாரணம், இங்கு ஏற்படுத்திய பாதிப்புகளுக்கான பொறுப்புகளிலிருந்து நரித்தனமாக தப்பிக்க பார்க்கிறார்கள். இந்த விவகாரத்தில் கடந்த ஆட்சியிலிருந்த நிலைப்பாட்டில் தான் இப்போது இருக்கும் அரசும் இருக்கிறது. தி.மு.க தேர்தல் பிரசாரத்தில் ஸ்ட்ரெலைட்டை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று ஸ்டாலின், கனிமொழி பேசி இருக்கிறார்கள். அந்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். அந்த நிறுவனம் தொடர்ந்து தந்திர வேலைகள் செய்தாலும் அரசாங்கம் அதை முறியடிக்க வேண்டும். இது தான் மக்களின் எதிர்பார்ப்பு” என்கிறார் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.