அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி – முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் உத்தவ் தாக்கரே?

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியிருப்பதால், தனது முதல்வர் பதவியை அவர் இன்று ராஜினாமா செய்வார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்ட்ராவில் ஆளும் சிவசேனாவை சேர்ந்த 33 எம்எல்ஏக்களுடன் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அசாமில் முகாமிட்டுள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்த வேண்டும் என அந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. ஆனால், இதனை முதல்வர் உத்தவ் தாக்கரே ஏற்கவில்லை. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் சிவசேனா தோல்வியடைந்து விட்டது. 33 எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல் மேலும் 7 எம்எல்ஏக்களும், சுயேச்சைகளும் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஏக்நாத் ஷிண்டே பாஜக பக்கம் சாய்ந்தால், அக்கட்சியால் எளிதில் மகாராஷ்ட்ராவில் ஆட்சியை பிடித்து விட முடியும் என்ற சூழல் நிலவுகிறது.
image
இந்த இக்கட்டான சூழலில், இன்று மதியம் 1 மணியளவில் அமைச்சரவைக் கூட்டத்தை உத்தவ் தாக்கரே கூட்டவுள்ளார். இந்தக் கூட்டத்துக்கு பிறகு அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என சிவசேனா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நிலைமை கை மீறி செல்வதால் மாநில சட்டப்பேரவையை கலைக்கும் சூழல் நெருங்கிவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.