மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரிய கர்நாடக அரசின் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து நீக்கியது ஒன்றிய அரசு

டெல்லி: மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுசூழல் அனுமதி கோரும் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து ஒன்றிய அரசு நீக்கியது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் தமிழகம் கடுமையாக எதிர்த்து வருகிறது. மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்பதும், காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்கக் கூடாது என்பதும்தான் தமிழக அரசின் உறுதியான, இறுதியான நிலைப்பாடு. மேகதாது அணை கட்டக் கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கர்நாடக மாநில அரசு தனது பிடிவாதமான செயல்களிலிருந்து பின்வாங்காமல் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் இப்பிரச்சினைக் குறித்த வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில் கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சுழல் அனுமதி விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து மத்திய சுற்றுச்சுழல் துறை நீக்கியுள்ளது. ஜல்சக்தித்துறை, காவிரி ஆணையம் இறுதி செய்தால் தான் சுற்றுசூழல் அனுமதி எல்லையை வழங்க முடியும். அணை கடடுமானத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்யாமல் ஆய்வு எல்லைகளை வழங்க முடியாது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சுற்றுசூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு 2019 ஜூன் 20-ல் விண்ணப்பம் போடப்பட்டது. திட்ட அறிக்கை இறுதி செய்யாததால் சுற்றுசூழல் அனுமதி கோரிய விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.