ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளிநாடு பயணம்… அனுமதி வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு…

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த மாதம் 28 ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்ல இருக்கிறார்.

பாரீசில் உள்ள இன்சீட் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ. முடித்துள்ள தனது மூத்த மகள் ஹர்ஷா ரெட்டியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தனது மனைவியுடன் செல்ல இருக்கிறார்.

ஜூன் 29 ம் தேதி நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர் ஜெகன் ஜூலை 2 ம் தேதி இந்தியா திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு நிலுவையில் இருப்பதால் பட்டமளிப்பு விழா தவிர பல்வேறு விவாகரம் தொடர்பாக வெளிநாடு செல்வதாக கருதப்படுவதால் அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கக் கூடாது என்று சி.பி.ஐ. தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை பலமாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் பாரிஸ் பயணத்துக்கு அனுமதி வழங்க கோரி 10 நாட்களுக்கு முன் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆந்திர முதல்வர் மனு அளித்துள்ளார்.

இந்த நிலையில் சி.பி.ஐ. ஆட்சேபனை தெரிவித்திருப்பதை அடுத்து அவரது வெளிநாட்டு பயணம் கேள்விக்குறியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.