உண்மையை பேசினார் சம்பந்தர்


 தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சொல்வதைப் போல இந்தப்
பொருளாதாரச் சரிவானது இலங்கையில் நிலவிய போரின் விளைவுதான்.

அதாவது இலங்கையும்
இந்தியாவும் இணைந்து தமிழர்களது மரபார்ந்த தாயகப் பிரதேசங்களை அழிக்க
மேற்கொண்ட போரின் விளைவுதான் இது.

மகாவம்ச மனநிலையின் கூட்டு வெளிப்பாட்டு
இலங்கை அரசிற்கு இயக்கமான இலங்கை அரசிற்கு வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர்
தாயகத்தை முற்றாக அழித்து அதனை சிங்கள தேசமாக மாற்றிக்கொள்ள் வேண்டிய தேவை
இருந்தது.

இராமனின் தேசமென ஐதீகமயப்படுத்தி வைத்திருக்கும் இலங்கை தேசத்தை,
அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் தனது 26 ஆவது மாநிலமாக
மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. இவ்விரு தரப்பினரது
தேவைகளுக்கும் தமிழர் தாயகத்தை அமைக்கப் உண்மையாகப் போராடும் அனைத்து
தரப்பினருமே எதிரியாக இருந்தனர். இருந்துவருகின்றனர்.

ஆயுதப்போர் வடிவமெடுத்த இனப்பிரச்சினை

உண்மையை பேசினார் சம்பந்தர்

அதனடிப்படையில்தான் ஒரு மேசையின் முன் பேசித் தீர்த்திருக்கப்படவேண்டிய
இலங்கையின் இனப்பிரச்சினை ஆயுதப்போர் வடிவமெடுத்தது.

இலங்கை சுதந்திரமடைந்த
நாள் தொட்டு இலங்கை அரசியலில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் தலையீடுகள் காரணமாக,
இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினை விடயத்திலும் இந்தியத் தலையீடு தன்னியல்பான
போக்கில் நிகழ்தேறியது.

இலங்கை அரசினால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட
அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிடுகிறோம் எனும் பெயரிலான
கண்டனங்கள், உதவிகள் எனத்தொடங்கிய இத்தகைய இந்தியத் தலையீடுகள் படிப்படியாக
வளர்ந்துள்ளன.

இலங்கை அரச பயங்கரவாதத்திலிருந்து தமிழர்களைப் பாதுகாக்க 32
இற்கும் மேற்பட்ட ஆயுத இயக்கங்களை உருவாக்கியமை, அவைகளுக்கு ஆயுதப்
பயிற்சியளித்தமை, அது போதாதென்று 1987 இல் நேரடியாகத் இந்தியப் படைகளை
இறக்கியமை, 13 ஆம் திருத்த சட்டம் கைச்சாத்து என இத்தலையீடுகள் ஏற்பட்டன.

இந்தியாவின் இத்தகைய நேரடித் தலையீடுகள் இலங்கையில் சிங்களவர்களின்
தேசத்தையும், சிங்கள அரசியலையும் கபளீகரப்படுத்திவிடும் என அஞ்சினார்கள்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தொடக்கம், சந்திரிக்கா குமாரதுங்கா பண்டாரநாயக்கா வரை
இந்தியாவை ஒரு எல்லையுடனேயே அனுமதித்தார்கள்.

ஜே.ஆர். ஒரு பக்கம் தன் படைகளைக்
கொண்டு புலிகளை அழித்துக்கொண்டே, மறுபுறம் புலிகளால் இந்திய அமைதிப்படை
இலங்கையிலிருந்து விரட்டியடிக்கப்பட உதவியாகவும் இருந்தார்.

சந்திரிக்காவின் யுத்தம் 

உண்மையை பேசினார் சம்பந்தர்

1990 ஆம் ஆண்டு
சந்திரிகா ஆட்சி பீடமேறி அடுத்து வந்த பத்தாண்டுகள் பதவியிலிருந்தார். இந்தக்
காலப் பகுதியிலேயே தமிழர் தாயகம் மீது மிலேச்சத்தனமிக்க போர் கட்டவிழ்த்து
விடப்பட்டது. வலிந்து காணாமலாக்கப்படுபவர்களது எண்ணிக்கை அதிகரித்தது. பாரிய
மனிதப் புதைகுழிகள் ஏற்படுத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை
செய்யப்பட்டனர்.

பொதுமக்கள் பாதுகாப்பிடங்கள் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட
தேவாலயங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் என அனைத்தின் மீதும் குண்டுவீசினார்.
‘சமாதானத்தின்தேவதை’ என்ற பெயரில் இவையனைத்தையும் செய்து முடித்தார்.
உக்கிரமிகு இந்தப் பத்தாண்டுகளில் எவ்விடத்திலும் அவர் இந்தியத் தலையீட்டை
நாடவில்லை. தன் நாடு தன் போர் என்ற கணக்கில் அனைத்தையும் நடத்தி முடித்தார்.

வடக்கு கிழக்கில் நிழல் அரசொன்றை உருவாக்கியிருந்த புலிகளை அழிக்க வேண்டிய
சமநேரத்தில், கறிவேப்பிலையாகத் தம்மைப் பயன்படுத்தி வந்த இலங்கையின் அரசியல்
மரபையும் மாற்றவேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏற்பட்டது. அதற்காக
உருவாக்கப்பட்டவர்களே ராஜபக்ச குடும்பத்தினர்.

2000 ஆம் ஆண்டோடு முடிவுற்ற சந்திரிகாவின் சகாப்தத்தோடு மேற்கின் நாயகனான
ரணில் ஆட்சிக்கு வந்தார். இலங்கை அரசியலில் ஒரு தொங்குநிலை உருவாகும்
போதெல்லாம் மேற்கு சார்பான – மென்னரசியலை முன்னெடுக்கக்கூடிய ஒருவர் ஆட்சி
பீடமேற்றப்படுவது மரபு. அதாவது அடுத்த வலிமை மிகு சிங்கள ஆட்சியாளர்களைத்
தேடிப்பிடிக்கும் வரை ஆட்சிக்கதிரையில் அமர்ந்திருக்கக்கூடிய ஒருவர்.

அந்நபராக
அதிக தடவைகள் ஆட்சிக்கதிரையில் அமரும் வாய்ப்பு சிங்கள மக்களால் அதிகம்
விரும்பபடாத ரணில் விக்கிரமசிங்கவுக்கே வாய்த்திருப்பது அவரின் அதிஸ்டம்தான்.

ஆனால் தனக்குக் கிடைக்கும் அரிய ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக
எதையெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் அவர் செய்துவிட்டுப் போய்விடுவார்.

2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டு வரைக்குமான அவரின் ஆட்சிக்காலத்தில்
முடிந்தளவுக்குப் புலிகளை பலவீனப்படுத்திவிட்டு அரசிலிருந்து ஒதுங்கினார்.

ராஜபக்ச யுகம்

உண்மையை பேசினார் சம்பந்தர்

இந்த மூன்றாண்டுகளுக்குள் இந்தியாவின் உற்ற நண்பர்களாக மாறிய ராஜபக்ச
குடும்பத்தினர் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டனர்.

பத்தாண்டு ஆட்சித் திட்டத்தின்
கீழ் கொண்டுவரப்பட்ட ராஜபக்சவினர், சீன – இந்திய – அமெரிக்க பூகோள அரசியலில்
இலங்கையை வலுவான பொறியொன்றில் சிக்க வைத்துவிட்டு வெளியேறினர்.

ராஜபக்சவினரின்
குடும்ப ஆட்சி நிலவிய முதல் ஐந்தாண்டுகளில் போர் மிக முக்கிய அரசியல் மூலதனமாக
இருந்தது. உள்நாட்டில் தமிழர் மீதான இனவாதத்தை சிங்களவர் மத்தியில் பரப்பி
அரசியல் இருப்பை தலைமுறைகள் கடந்தும் உறுதிப்படுத்திக்கொண்டனர்.

வெளிநாடுகளுக்குப் போரைக் காட்டி கல்லாகட்டினர்.

இந்தக் காலகட்டத்தில் லஞ்சம்,
ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என்பன தலைவித்தாடின. இதையெல்லாம் தட்டிக்கேட்க
யாரும் முன்வரவில்லை.

எல்லோருக்குமே போர் பெரு விருந்தாக இருந்தது. அதையும்
மீறி தட்டிக்கேட்டவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். காணாமலாக்கப்பட்டார்கள்.
ஒருபுறம் போர், மனிதப் படுகொலைகள், மறுபுறம் வலிந்து காணாமலாக்கப்படுதல்கள்,
சுட்டுப் படுகொலை செய்தல் சம்பவங்கள் என இலங்கை மனிதவுரிமை மீறல் சம்பவங்களால்
அதிர்ந்துகொண்டிருந்தது.

இலங்கையில் இவ்வாறான வேளைகளில் வழமையாக கண்டிப்போடு
களமிறங்கும் இந்தியா இந்த விடயங்களில் தலையிடாது அமைதிகாத்துக்கொண்டிருந்தது.
தன் முழு முதலீட்டையும் இலங்கையின் போருக்கு வழங்கிக்கொண்டிருந்தது.

ஆயுத
உதவிகள், நேரடி – மறைமுக படைய உதவிகள், மருத்துவ உதவிகள், நிதி அனுசரணை என
இலங்கையின் போருக்கு உதவி வழங்கிய நாடுகளின் பட்டியலில் தன்னை முதலிடத்தில்
தக்கவைத்துக்கொண்டது இந்தியா.

இந்தியாவின் ஏவலாளர்களாக செயற்பட்ட
ராஜபக்சவினர் மேற்கொண்ட மானுட குலத்திற்கு எதிரான எந்த நடவடிக்களுக்கு
எதிராகவும் இந்தியா வாயே திறக்கவில்லை. மெளனமே என் சம்மதம் என்ற கணக்கில்
இவ்விடயங்களைக் கையாண்டது.

போருக்குப் பின்னரான ஐந்தாண்டுகளது இலங்கை அரசியலும் ராஜபக்சவினரை
மையப்படுத்தியிருந்தது. இந்த ஐந்தாண்டுகளில், போரில் அழிவுற்ற இலங்கையை
மீளக்கட்டியெழுப்புவதற்கான நிதி, பொருளாதார உதவியை இந்தியா வழங்கியது.

இந்திய
வீட்டுத்திட்டங்கள், புகையிரத பாதை புனரமைப்பு, இதர அடிப்படைக்
கட்டுமானங்களுக்கு இந்தியா உதவியது. தன் சொந்த நாட்டில் பல கோடி தெருவில் மலம்
கழித்துக்கொண்டிருக்க இலங்கைத்தீவின் கடைசிக் குடிமகனுக்கும் இலவசமாக
மலசலகூடம் அமைத்துக்கொடுத்தது இந்தியா.

அந்தளவுக்கு இலங்கை வாழ் மக்களில்
கரிசணை காட்டுகிறோம் வழியில் வந்து தன் முதலீட்டைக் கொட்டியது. அந்தப்
பத்தாண்டுகளில் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்குக் கொடுத்து ‘நக்கினார்
நாவிழந்தார்’ நிலையை இலங்கைக்கு ஏற்படுத்தியது.

இத்தகைய இந்திய அரசியல்
ஏற்பாடுகள் இலங்கையை மொத்தமாகக் கபளீகரப்படுத்தி விடும் என்ற அபாயம்
குறித்தெல்லாம் ராஜபக்சவினர் எவ்வித கவலையும் கொள்ளவில்லை.

இந்தியாவின் மாய வலை

உண்மையை பேசினார் சம்பந்தர்

இந்தியாவினால்
உதவிகள், கடன்கள் என்ற போர்வையில் விரிக்கப்பட்ட மாயவலை குறித்து எவ்வித
கவனமும் செலுத்தப்படவில்லை.

தம் குடும்பத்தினரின் ஏழேழு தலைமுறைக்கும் சொத்து
சேர்ப்பதில்தான் அவர்களது மொத்தக்கவனமும் இருந்தது.

இந்தப் போக்கின் ஆபத்தை விளங்கிக்கொண்ட ‘கொழும்பு லிபரல்ஸ்’ எனப்படும் அரசியல்
குழாத்தினர் ஜனநாயகம், ஊழலற்ற ஆட்சி, சிறுபான்மை இனங்களுக்கு அரசியல் உரிமை
போன்ற விடயங்களை முன்வைத்துப் பெயரளவில் நல்லாட்சி அரசொன்றை உருவாக்கினர்.

இலங்கை மீதான இந்தியாவின் அரசியல் தலையீடுகளை விரும்பாதவர்கள், இந்தியாவின்
தலையீடுகளுக்கு ஒரு எல்லைக்கோடு வைத்திருந்தவர்களே இந்த நல்லாட்சி அரசின்
உருவாக்கத்தின் பின்னால் இருந்தனர். எனவே நல்லாட்சிக் காலத்தில் பெரியளவில்
இந்தியத் தலையீடுகள் ஏற்படவில்லை.

இந்தியாவின் எதிர்வுகூறல்

உண்மையை பேசினார் சம்பந்தர்

ஆனால் 2019, ஏப்ரல் ஈஸ்டர் தாக்குதல்கள்
இடம்பெறப்போவதை இந்தியா முன்கூட்டியே சொன்னது. அதே போல தாக்குதலும்
இடம்பெற்றது.

இரு நூறுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள்
பலிகொடுக்கப்பட்டார்கள். இந்தப் பலிகொடுப்போடு நல்லாட்சி நாடகம் முடிந்தது.
இந்தியாவின் உற்ற நண்பர்களான ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சி பீடமேறினார்கள்.

ராஜபக்சக்களின் மீள்வருகையோடு நாட்டில் பாலாறும் தேனாறும் பாயும் என்றே சிங்கள
மக்கள் நம்பினார்கள். ஆனால் ஏற்கனவே வாங்கிய மொத்த கடனும் வந்து கழுத்தை
இறுக்கியது. ஆனால் ராஜபக்சக்கள் தம் பழைய மொந்தையில் பழைய கள்ளையே பருகித்
திளைத்தனர்.

ஊழல், குடும்ப ஆட்சி, அதிகாரத் துஷ்பிரயோகம் கொடிகட்டிப் பறந்தது.
தம் தவறான – செயற்றிறனற்ற நிர்வாக நடத்தையை மீளவும் நடைமுறைப்படுத்தினர்.

இவையனைத்தும் இணைந்து ராஜபக்வினரின் அரசியலையும், சிங்களவரின் இலங்கை
தேசத்தையும் அதளபாதாளத்தில் தள்ளியது. ஆட்சிக் குழப்பமும், குடும்பச்
சட்டையும் கழுத்தைப் பிடித்து நெரித்து சண்டையிட்டுக்கொண்டிருக்கிறது.

இதிலிருந்து மீள கடன் பட்டார் நெஞ்சமுடைய இலங்கை வேந்தர்கள் மீளவும்
இந்தியாவின் கால்களிலேயே விழுந்து கிடக்கின்றனர்.

அவ்வாறு விழுந்து கிடக்கும்
இலங்கை வேந்தர்களில் தன் அரசியல், வணிக நலன்களுக்குப் பொருத்தமானவர்களுக்கு
வாரி வழங்கி அவர்தம் அரசியலை இந்தியா தற்போதைக்கு வாழவைத்துக்கொண்டிருக்கிறது.
அது இலங்கை ஆகிய மொத்தத் தீவையும் தன் 26 ஆவது மாநிலமாக மாற்றும் வரைக்கும்
மட்டும் தொடரும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.