செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

கடந்த சில தினங்களாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாகச் சென்னையைச் சுற்றியுள்ள முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளால் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி மற்றும் ஏரியின் உயரம் 24 அடியாகும்.

செம்பரம்பாக்கம் ஏரி

இந்த ஏரியின் பாதுகாப்பான நீர் அளவு 23 அடிதான். ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் ஏரிக்கு வெள்ள நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக, நேற்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியில், 23.48 அடியும், 3,500 மில்லியன் கன அடியாக இருக்கிறது. மேலும், ஏரியின் நீர்வரத்து 550 கன அடியாகக் காணப்பட்டது.

இதன் காரணமாக, நேற்று மதியம் 12 மணிக்கு ஏரியிலிருந்து உபரி நீராக வினாடிக்கு 250 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. மேலும், ஏரிக்கு வரும் நீரின் அளவை பொறுத்துத் திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தினால் தற்போது திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர்

ஏரியில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதன் காரணமாக, நீர் வரும் பகுதிகளான குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, அடையாறு ஆற்றின் இரண்டு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.