டிஎன்பிஎல்: திருச்சி அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திண்டுக்கல் அணி..!

நெல்லை,

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் இன்று நெல்லையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திண்டுக்கல் அணி பேட்டிங் செய்தது.

திண்டுக்கல் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பிரதீப் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் முதல் ஓவரிலேயே அவுட்டானார். அணியின் கேப்டன் ஹரி நிஷாந்த் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய மணி பாரதி, விஷால் வித்யா முறையே 18 மற்றும் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி வீரர்கள் மிகக் குறைந்த ரன்களில் அவுட்டாகினர். 20 ஓவர்கள் முடிவில் லட்சுமண நாராயண விக்னேஷ் 32 ரன்களுடனும் மனோஜ் குமார் ஒரு ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். திருச்சி அணி சார்பில் அதிகபட்சமாக அஜய் கிருஷ்ணா மற்றும் ரஹில் ஷா இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி பேட்டிங் செய்ய உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.