பாதுகாப்பான கார்களுக்கு நட்சத்திரக் குறியீடு அறிமுகம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி-இந்தியாவில், பாதுகாப்பான கார்களுக்கு நட்சத்திரக் குறியீடு வழங்கும் நடைமுறை அறிமுகமாக உள்ளது.இந்தியாவில், சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

latest tamil news

இது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:கடந்த 2020ல், 3 லட்சத்து 66 ஆயிரத்து 138 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில், 1 லட்சத்து 31 ஆயிரத்து 714 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், சாலை விபத்துகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.வரும் 2024ல், சாலை விபத்துகளை, 50 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ‘பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம்’ அறிமுகமாக உள்ளது. இத்திட்டத்தில், சர்வதேச வழிமுறையை பின்பற்றி, பாதுகாப்பான கார்களுக்கு அவற்றின் திறனுக்கு ஏற்ப, ஐந்து நட்சத்திரக் குறியீடு வழங்கப்படும்.விபத்து சோதனையில் தேர்ச்சி பெறும் கார்களுக்கு, இந்தக் குறியீடு தரப்படும். இதனால், கார் தயாரிப்பு நிறுவனங்கள், பயணியர் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும். இந்த குறியீடு அடிப்படையில், மக்கள் தங்களுக்கு விருப்பமான கார்களை தேர்வு செய்யலாம்.

latest tamil news

இத்திட்டம், கார் தயாரிப்பு நிறுவனங்களிடையே ஆக்கப்பூர்வமான போட்டியை ஏற்படுத்தும். இதனால், உலகளவில் இந்திய கார்களின் பாதுகாப்பு பற்றி பேசப்படும். ஏற்றுமதி அதிகரிக்கும். இது, கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், பயணியருக்கும் ஏற்ற திட்டம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.