திருப்பதியில் அலைமோதும் கூட்டம் ஏழுமலையானை தரிசிக்க 3 கிமீ தூரம் நீண்ட வரிசை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் திருமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால், இலவச தரிசன வரிசையில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் 71,589 பக்தர்கள் தரிசித்தனர். இதில், 41,240 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ₹4.30 கோடியை காணிக்கையாக செலுத்தினர்.தொடர்ந்து, சனிக்கிழமையான நேற்று காலை வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகள் முழுவதும் நிரம்பி ஆஸ்தான மண்டபம் வரை 3 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் நின்றனர். இதனால், இலவச தரிசனத்தில் 15 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ₹300 சிறப்பு விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். வாராந்திர விடுமுறையில் கூட்டம் அதிகளவில் வருவதால், கடந்த ஒரு மாதமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டு, சிபாரிசு கடிதங்கள் பெயரில் யாரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.