டிஎன்பிஎல்: நெல்லை அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேலம் ஸ்பார்டன்ஸ்..!

நெல்லை,

6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. நெல்லையில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற, நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜாஃபர் ஜமல் மற்றும் கோபிநாத் முறையே 11 ரன்கள் மற்றும் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கவின் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற டேரில் பெராரியோ 60 ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார்.

இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.