இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக 700 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி: உளவுத்துறை எச்சரிக்கை

ஸ்ரீநகர்: இந்தியாவில் ஊடுருவி தாக்குதல் நடத்துவற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 700 தீவிரவாதிகளுக்கு 11 முகாம்களில் ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு வழியாக பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவுகின்றனர். இவர்கள் ஜம்முவில்  தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப நாட்களாக தீவிரவாதிகளின் இந்த நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் நேற்று கூறிய தாவது: எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இந்தியாவிற்குள் ஊடுருவுவதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 150 தீவிரவாதிகள் தற்போது தயார்நிலையில் இருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. இது மட்டுமின்றி அங்குள்ள மான்ஷேரா, கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள 11 முகாம்களில் 500 முதல் 700 தீவிரவாதிகள் ஆயுத பயிற்சி பெற்று வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தாண்டு இதுவரையிலும் எந்த தீவிரவாதிகளும் ஊடுருவி நாட்டிற்குள் நுழையவில்லை. தீவிரவாதிகளின் ஊடுருவலை வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து வருகின்றனர். பந்திபோரா, சோப்பூரில் நுழைந்த தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். கடந்த 40-42 நாட்களில் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும், இது இன்னும் சவாலான விஷயமாகும். ஏனெனில் தற்போது தீவிரவாதிகள் ரஜோரி, பூஞ்ச் வழிகளில் நுழைவதற்கு முயற்சித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.