ஊழல் புகாரில் கைதான ஐஏஎஸ் அதிகாரியின் மகன் அவமானத்தில் தற்கொலை

சண்டிகர்: பஞ்சாபில் ஊழல் புகாரில் கைதான ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில் சோதனை நடந்தபோது அவரது மகன் தற்கொலை செய்து கொண்டார்.

பஞ்சாப் மாநில ஓய்வூதிய துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் பாப்லி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இதற்கு முன்பு சஞ்சய் பாப்லி கழிவு நீரகற்று வாரிய தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது, பைப்லைன் அமைப்பது தொடர்பான டெண்டரை ஒதுக்குவதற்காக 1 சதவீதம் லஞ்சம் கேட்டதாக ஊழல் தடுப்பு பிரிவின் ஹெல்ப்லைன் எண்ணில் ஒப்பந்ததாரரான சஞ்சய் குமார் புகார் செய்தார். இதையடுத்து, ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 20-ம் தேதி சஞ்சய் பாப்லியை கைது செய்தனர்.

மேலும் அவரது வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் 12 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், ஏராளமான துப்பாக்கி ரவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, சோதனை நடந்தபோது சஞ்சய் பாப்லியின் மகன் கார்த்திக் (26) வீட்டின் முதல் தளத்தில் தற்கொலை செய்து கொண்டார். தந்தை ஊழல் புகாரில் சிக்கியதால் அவமானம் தாங்காமல் அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால், கார்த்திக்கை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திவருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.