டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் கோவை கிங்ஸ் அணி 188 ரன்கள் குவிப்பு..!

நெல்லை,

6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நெல்லையில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. கோவை அணியில் தொடக்க வீரர்களாக கங்கா ஶ்ரீதர் ராஜூ மற்றும் சுரேஷ் குமார் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இருவரும் முறையே 33 மற்றும் 37 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து விளையாடிய சுஜித் சந்திரன் மற்றும் முகிலேஷ் சிறப்பாக விளையாடி இருவரும் முறையே 30 மற்றும் 49 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தனர். இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி பேட்டிங் செய்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.