மரம் விழுந்து பெண் பலி | முறைமன்ற நடுவம் அறிவுரை, அமைச்சர் உத்தரவை அலட்சியப்படுத்தியதா சென்னை மாநகராட்சி?

சென்னை: மரக்கிளைகளை அகற்றுவது தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு முறைமன்ற நடுவம் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோரின் உத்தரவுகளை சென்னை மாநகராட்சி அலட்சியப்படுத்தியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை கேகே நகரில் சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்து பெண் வங்கி மேலாளர் உயிரிழந்தார். மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டபோது, அதில் மண் சரிவு ஏற்பட்டு, மரம் சாய்ந்து, காரில் விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த சென்னை மாநகராட்சி, “இரண்டு நாட்களாக மழை நீர் வடிகால் பணி நடைபெறவில்லை. மழை நீர் வடிகால் பணிக்கும், மரம் இருந்த இடத்துக்கும் 2 மீட்டர் இடைவெளி உள்ளது. மரம் இயற்கையாக விழுந்தது” என்று தெரிவித்தது.

இந்நிலையில், மரங்களை அகற்றுவது தொடர்பாக முறைமன்ற நடுவம் அறிவுறுத்தல், அமைச்சர் உத்தரவு, 40 மரங்கள் முறிந்த நிகழ்வு என்று அனைத்தையும் மாநகராட்சி அலட்சியப்படுத்தியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முறைமன்ற நடுவம் உத்தரவு – 7.06.2022

கொருக்குப்பேட்டை ஜீவா நகர் 12-வது குறுக்கு தெருவில் உள்ள பழைய அரச மரத்தின் கிளைகளை அகற்ற கோரி விஜயகுமார் மற்றும் அன்பரசன் ஆகியோர் சென்னை மாநகராட்சியில் பல முறை புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் அளித்தனர்.

இந்த மனுவை விசாரித்த முறைமன்ற நடுவர் மாலிக் பெரோஸ்கான், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக மரக்கிளைகளை அகற்றாமல், மெத்தனப்போக்குடன் செயல்பட்டு முறைமன்ற நடுவத்தில் புகார் செய்த உடன் மரக்கிளைகளை அகற்றியது சரியல்ல என்று கருத்து தெரிவித்து இருந்ததார். மேலும், இதுபோன்ற அடிப்படை பாதுகாப்பு பணிகளில் சுணக்கம் காட்டும் பகுதி அலுவலர்கள் குறித்து எச்சரிக்கவும், சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார்.

40 மரங்கள் முறிவு

சென்னையில் கடந்த 20, 21 மற்றும் 22 ஆகிய 3 நாட்களில் மாலை நேரங்களில் பெய்த கனமழை காரணமாக 19 இடங்களில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக 36 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த மரங்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றினர்.

அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சி அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, 3 நாட்கள் பெய்த மழைக்கே இவ்வளவு மரங்கள் விழுந்துள்ளது என்பதைக் குறிப்பிட்டு, சென்னையில் விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதில் 2 முறை மரம் விழுவது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு அமைச்சர் மற்று முறைமன்ற நடுவம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஆனால், அவற்றை சென்னை மாநகராட்சி முறையாக செயல்படுத்தியாதா என்பது விடை தெரியாத கேள்விதான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.