சுழல் வெப்சீரிஸில் வந்த மயானக் கொள்ளை – நடுங்க வைக்கும் இந்த அங்காளியம்மன் விழா உருவான கதை தெரியுமா?

சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான `சுழல்’ வெப்சீரிஸில் `மயானக் கொள்ளை’ நிகழ்வு கதையில் முக்கியமானதொரு இடத்தைப் பிடித்திருக்கும். அது குறித்த காட்சிகள் ஒருவித திகில் உணர்வைக் கொடுக்கும். அது என்ன மயானக் கொள்ளை? அங்காள அம்மனின் இந்தத் திருவிழாவின் பின்னணி என்ன?

எங்கெல்லாம் மயானம் இருக்கிறதோ அங்கெல்லாம் அங்காள அம்மனின் திருக்கோயில் இருக்கும். அங்கே நிச்சயமாக மாசி மாத அமாவாசை தினத்தில் மயானக் கொள்ளை எனும் நடுங்க வைக்கும் திருவிழாவும் நடைபெறும்.

ஆணவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையை ஈசன் கொய்துவிட, அந்த பிரம்ம கபாலம் ஈசனின் திருக்கையில் ஒட்டிக்கொண்டுவிட்டது. பிரம்மனின் தலையைக் கொய்யும்போது தேவி சக்தி சிரித்துவிட, ஆத்திரம் கொண்ட சரஸ்வதி ‘மண்ணுலகில் பிச்சியாக, பேயாகத் திரிந்து, கொக்கிறகும், கோழியிறகு உடலெங்கும் போர்த்தி, மயானம் காக்கும் காளியாக திரிந்து வா!’ என்று சாபம் இட்டார். அப்படியே சக்திதேவியும் மண்ணுலகில் மேல்மலையனூருக்கு வந்து இறங்கினாள். அங்கே யாசகம் கேட்டு வந்த ஈசனாரின் கரத்தில் ஒட்டியிருந்த கபாலத்தை அங்காளி தன் காலால் மிதித்து அழித்தாள். அந்த நாளே மயானக் கொள்ளை தினமானது.

மயானக் கொள்ளை

இதே கதை காசியிலும் உண்டு. காசி அன்னபூரணி அங்காளியம்மனின் அம்சமே. மேல்மலையனூரில் உற்சவ தேவியும் அன்னபூரணியே. மாசி மாத சிவராத்திரிக்கு அடுத்த நாள் அமாவாசை, அன்று அங்காளி பூரண பலத்தோடு தீமைகளை எதிர்க்கத் தயாராக இருப்பாள். இறந்துபோன ஆன்மாக்களுக்கு உணவை சூரையிடும் நாளே மயானக் கொள்ளை என்றும் கூறப்படும். ஈசனின் அங்கத்தை ஆளும் தேவி என்பதால் இவள் அங்காளி என்று ஆனதாகவும் கதை உண்டு!

யாருக்கும் கட்டுப்படாத அங்காளியை ஈசன் அடக்கிக் கட்டுக்குள் கொண்டு வந்தார் என்றும், அங்காளியின் வேண்டுதலுக்காக சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை நாள் மட்டும் அங்காளியின் கட்டு அவிழ்க்கப்பட்டு, அப்போது மட்டும் தீயவர்களின் உயிர்பலி வாங்க அனுமதி அளித்தார் என்றும் ஒரு கதை திருவண்ணாமலை பக்கம் சொல்லப்படுவது உண்டு.

மயானக் கொள்ளை

தட்சனின் யாகத்தில் விழுந்து உயிர்விட்ட தாட்சாயணியின் திருவுருவமே அங்காளி என்றும், யாருக்கும் அடங்காமல் மலையனூரில் திரிந்த அவளை, ஈசன் மீண்டும் ஆசுவாசப்படுத்தி ஏற்றுக் கொண்ட நாளே மயானக் கொள்ளை விழா என்றும் ஒரு கருத்து உள்ளது. சுயம்புவாக இப்போது கருவறையில் வீற்றிருக்கும் அங்காள அம்மனை ஒருமுறை சென்று தரிசித்தாலே எல்லாவிதமான அச்சங்களும் நீங்கி சுகவாழ்வு பெறுவர் என்பது நம்பிக்கை.

பல ஊர்களில் மயானக்கொள்ளை நாளில் மகாபாரதத்தைத் தொடர்புப்படுத்தி துரியோதனன் படுகளமும், சுடுகாட்டுச் சாம்பலில் திரௌபதி உருவம் செய்து கலைக்கும் விழாவும் நடப்பதுண்டு. மாசி அமாவாசையில் திரௌபதி தனது எதிரிகளை ஒழித்து கூந்தல் முடித்தாள் என்ற கருத்தும் வடதமிழகத்தில் உண்டு. அதே நாளில் பாரி வேட்டையும் சில இடங்களில் நடப்பதுண்டு.

அங்காளியம்மன்

அங்காளிக்கு தாய் வீடே மலையனூர்தான். இங்கு வந்தே முதன்முதலாக தேவி தவமிருந்து புற்று மண் மூடிக்கொள்ள காத்து இருந்தாள். மலையரசனின் ஆளுகைக்கு உட்பட்ட இடமாக இது இருந்ததால் மலையனூர் என்றானது. இன்று கரகம், காளியாட்டம், புலியாட்டம், மயிலாட்டம், உடுக்கை சிலம்பு வாசிப்பவர்கள் யாரும் மலையனூர் விழாவுக்கு வந்து நிகழ்ச்சி நடத்தினால் காசு வாங்க மாட்டார்கள். இந்த ஊர் அவர்களின் ஆதி ஊர் என்றும் அம்மாவின் ஊர் என்றும் போற்றுவார்கள்.

காட்டேரி, பாவாடை ராயன், அங்காளி, செங்காளி, கருப்புக்காளி, முனி, பெரியண்ணன், கருப்பண்ணன், பேய்ச்சி என பல வேடமிட்டவர்கள் இந்த மயானக்கொள்ளை விழாவில் நகர் வலம் வந்து வெறியோடு ஆட்டம் ஆடி மக்களுக்கு ஆசியும் குறியும் சொல்வார்கள். அங்காளம்மன் கோயிலில் இருந்து புறப்படும் பெரும் கூட்டம் நள்ளிரவில் மயானத்தை அடையும்.

இறந்த உறவுகளுக்குப் படையல்

அங்காளியம்மனுக்காக நேர்ந்து கொள்பவர்களும், கரகம் எடுப்பவர்களும் 40 நாள்களுக்கு முன்னரே விரதமிருக்கத் தொடங்குவார்கள். மஞ்சள் ஆடை உடுத்தி, காப்பு கட்டிக்கொள்வார்கள். சிவராத்திரியை அடுத்து வரும் அமாவாசை தினத்தில் சுடுகாட்டுக்கு அருகிலிருக்கும் அங்காளியம்மன் கோயிலிலிருந்து ஆடல், பாடல், இசையோடு ஊர்வலமாகச் சுடுகாட்டை நோக்கி சூறையாடக் கிளம்புவார்கள்.

தங்கள் வீடுகளில் விளையாத மரங்கள், பயிர்கள், நோயுற்ற மானிடர்களுக்காக மக்கள் வேண்டிக் கொள்வார்கள். அந்த வேண்டுதல் நிறைவேறியதும் இந்த மயானக் கொள்ளை நாளில் நன்றிக்கடனாக கீரைகள், பழங்கள், கிழங்குகள், கொழுக்கட்டை, மஞ்சள், பயிறு வகைகளை அள்ளி அள்ளி அம்மனின் சப்பரத்தை நோக்கி வீசுவர்.

மயானச் சாம்பல்

நள்ளிரவில் சுடுகாட்டை அடைந்ததும் சாமியாடிகள் வெறி கொண்டு, அம்மனாக ஆவேசம் வந்து அங்கு இருக்கும் ஆடு, கோழிகளை வாயால் கடித்து ரத்தம் வடிய சுடுகாட்டு மண்ணில் புரண்டு அருளாசி தருவர். பிறகு மயானச் சாம்பலால் செய்யப்பட்ட உருவத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள். இங்கு கொள்ளை என்றால் பறிப்பது என்று பொருள் இல்லை. காளிதேவி அசுரசக்திகளை விரட்டுவது என்றே பொருள். இந்தச் சாம்பல் மன நோய்களையும், தீய சக்திகளையும் விரட்டியடிக்கும் ஆற்றலுடையது என்பதால் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று மூட்டை கட்டி வீட்டு வாசலில் தொங்க விடுவார்கள்.

ஏழை எளிய மக்களின் திருவிழா என்றால் அது மயானக் கொள்ளை விழாதான். அந்த விழாதான் பாமர மக்களின் எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றும் ஒரு மகத்தான விழா எனப்படுகிறது. இந்த மயானக்கொள்ளை அங்காளியம்மனின் புராணக் கதையை மட்டும் சார்ந்தது இல்லை. இறந்தவர்களை நினைக்கும் உருக்கமான திருவிழாவாகவும் இருக்கிறது. இறந்துபோன தங்களது உறவுகளை எண்ணி, ஒவ்வொரு குடும்பத்தினரும் அன்று சுடுகாட்டுக்குச் செல்வார்கள். இறந்தவர்களுக்கு விருப்பமான பண்டங்களை படையலாகப் போட்டு வணங்குவார்கள். பெண்கள் கூடி அமர்ந்து, உறவினர்களைப் புதைத்த இடத்தில் ஒப்பாரி வைத்து அழுவார்கள்.

படையல் விழா

ஓராண்டுக்குள் இறந்த உறவுகளுக்குப் படையல் வைக்க வருபவர்கள் அங்கிருக்கும் ஹரிச்சந்திரனுக்கு முதல் படையல் வைத்து வணங்கிவிட்டே உள்ளே செல்வார்கள். இறந்த ஆன்மாக்களுக்கு சக்தி உணவளிக்கும் விழா இது என்று சொல்லப்பட்டாலும், இது ஏழை மக்களின் படையல் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.