பாலியல் புகாருக்கு ஆளான நடிகர் விஜய்பாபு கைதாகி, விடுவிப்பு

மலையாள திரையுலகில் தயாரிப்பாளர், நடிகர் என பிரபலமானவர் நடிகர் விஜய்பாபு. கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி மலையாள நடிகை ஒருவர், விஜய்பாபு தனக்கு படங்களில் வாய்ப்பு தருவதாக கூறி, பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு மறுநாளே விஜய்பாபு அந்த நடிகை குறித்த அடையாளத்தை பகிரங்கமாக சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தினார். இந்த இரண்டு விஷயங்களிலும் விஜய்பாபு மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் அவர் ஒரு மாத காலம் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி சில நாட்களுக்கு முன்பு கேரளா திரும்பிய அவர் போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

இந்தநிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், விஜய் பாபுவை கைது செய்ய தடை இல்லை என உத்தரவிட்டது. அதேசமயம் போலீசார் விஜய்பாபுவை கைது செய்ய விரும்பினால் அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் பிணைத்தொகை ஆகவும் இரண்டு நபர்களின் உறுதிமொழியையும் பெற்றுக்கொண்டு அவரை ஜாமீனில் வெளியே விடவேண்டும் என்றும் அதில் கூறியிருந்தது. அந்தவகையில் இன்று நடிகர் விஜய்பாபு கைது செய்யப்பட்டு பின் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார். அதே சமயம் வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் விஜய்பாபுவிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்கு காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.