தீபக் ஹூடா அதிரடி சதம்: அயர்லாந்து அணிக்கு 228 ரன்கள் வெற்றி இலக்கு

டப்ளின்,

இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்ரு வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதன்படி இந்திய அணியின் சார்பில் முதலாவதாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் இஷான் கிஷன் 3 ரன்களில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக சாம்சனுடன், தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. அதிரடியில் மிரட்டிய தீபக் ஹூடா மற்றும் சாம்சன் ஆகியோர் தங்களது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினர். இந்த ஜோடியில் சிறப்பாக ஆடி வந்த சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து தீபக்ஹூடாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார்.

தொடர்ந்து அதிரடி காட்டி வந்த தீபக் ஹூடா 55 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் அதிரடியாக துவங்கிய சூர்யகுமார் யாதவ் 15 (5) ரன்களில் வெளியேறினார். அவரைதொடர்ந்து தீபக் ஹூடாவும் 57 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் (0), அக்சர் பட்டேல் (0), ஹர்சல் பட்டேல் (0) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

இறுதியில் புவனேஷ்வர் குமார் 1 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 15 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனையடுத்து 20 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 227 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக மார்க் ஆதிர் 3 விக்கெட்டுகளும், கிரீக் யங் மற்றும் ஜோஸ்வா லிட்டில் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்படி 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணிக்கு 228 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.