அ.தி.மு.க நாளிதழ் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகல்: நம்பிக்கை தகர்ந்து விட்டதாக பதிவு

Maruthu Alaguraj resigns as editor on ADMK daily Namathu Amma: அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் ‘நமது அம்மா’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக மருது அழகுராஜ் அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சிக்குள் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட முடியாத நிலையில், ஜூலை 11ல் நடக்கவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற இ.பி.எஸ் தரப்பு முயற்சித்து வருகிறது. இதனை தடுக்க சட்ட நடவடிக்கைகளை முடுக்கியுள்ளது ஓ.பி.எஸ் தரப்பு.

இந்தநிலையில், அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் ‘நமது அம்மா’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக மருது அழகுராஜ் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: கிடப்பில் போடப்பட்ட கலைஞர் அரசாணை… தமிழக அரசு மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!

முன்னதாக, அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்து ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ்.

ஜெயலலிதா இருந்த வரை ஆசிரியராக பணியாற்றிய மருது அழகுராஜ், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா தரப்பினர் கைக்கு நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் சென்ற நிலையில், சித்திரகுப்தன் எனும் புனைபெயரில் அவர் எழுதிய கவிதைக்காக ’நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்னர், ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் அ.தி.மு.க தலைமை பொறுப்புக்கு வந்தப் பின்னர், கட்சிக்கான அதிகாரப்பூர்வ நாளிதழாக ’நமது அம்மா’ என்ற பெயரில் நாளிதழ் தொடங்கப்பட்டது. இந்த நாளிதழ் தொடங்கப்பட்டது முதல் அதன் ஆசிரியராக இருந்து வருகிறார் மருது அழகுராஜ்.

தற்போது அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எந்தத் தரப்பிற்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்தார் மருது அழகுராஜ்.

இதனிடையே சில நாட்களுக்கு முன், ’நமது அம்மா’ நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டது. நிறுவனராக எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் மட்டும் இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில், ’நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக மருது அழகுராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மருது அழகுராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ’”நதிகாக்கும் இரு கரைகள்” என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமைக்கு ஆதரவு அதிகரித்துவரும் சூழலில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழின் ஆசிரியர் பதவி விலகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருது அழகுராஜ் 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.