சிலி | ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ.43000-க்கு பதிலாக ரூ.1.42 கோடி சம்பளம்; தலைமறைவான விவகாரம்

சாண்டியாகோ: சிலி நாட்டில் ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ.43000-க்கு பதிலாக ரூ.1.42 கோடி சம்பளமாக கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக தெரிவித்த ஊழியர் தலைமறைவாகி உள்ளார். அதனால், இப்போது அந்த நிறுவனம் சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை அணுக முடிவு செய்துள்ளது.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று சிலி. அந்த நாட்டில் இயங்கி வரும் சியல் (Cial) என்ற நிறுவனத்தில்தான் இது நடந்துள்ளது. கடந்த மே மாதம் சம்பந்தப்பட்ட ஊழியரின் வங்கிக் கணக்கில் அவரது வழக்கமான மாதச் சம்பளத்தை காட்டிலும் 246 மடங்கு கூடுதலாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கணக்கு வழக்குகளை அந்நிறுவனம் சரிபார்த்த போதுதான் இந்த தவறு நடைபெற்றுள்ளதை கவனித்துள்ளது. தொடர்ந்து அந்த ஊழியரை தொடர்பு கொண்டுள்ளனர்.

அவரும் தன் வங்கிக்கு நேரில் சென்று பணத்தை நிறுவன கணக்கிற்கு ரிட்டர்ன் செய்யும் பணியை கவனிப்பதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால், அவரை அதன் பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது. போனில் தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை.

பின்னர் அந்த நபர், ஹெச்.ஆர் பிரிவு அலுவலர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். வேலை செய்த சோர்வு காரணமாக தான் தூங்கிவிட்டதாகவும், வங்கிக்கு செல்வதாகவும் பணம் அனுப்பும் பணியை கவனிப்பதாகவும் சொல்லியுள்ளார். ஆனால் ஜூன் 2-ம் தேதியன்று தனது விலகல் கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர்தான் அந்த ஊழியர் தனக்கு கிடைத்த தொகையோடு தலைமறைவாகி உள்ளார் என்பதை நிறுவனம் உணர்ந்துள்ளது. தற்போது பணத்தை அவரிடம் இருந்து மீட்கும் நோக்கில் சட்ட ரீதியிலான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது அந்நிறுவனம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.