மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் – ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசுக்கு சிவசேனா கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்களின் அதிருப்தி காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து மகாராஷ்டிரா ஆளுநர் கோஷியாரி வியாழன் அன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். ஆளுநரின் உத்தரவு சட்டவிரோதமானது என அதனை எதிர்த்து சிவசேனா தலைமைக் கொறடா சுனில் பிரபு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர மனுவாக விசாரித்தது. அதில் மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை இல்லை என தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு சொந்த கட்சியான சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் உத்தவ் அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

இதனிடையே, சமூக வலைத்தளம் மூலம் பேசிய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கூட்டணி கட்சித் தலைவர்கள் சோனியா மற்றும் சரத் பவார் ஆகியோர் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, “என்னை ஆதரித்த என்சிபி மற்றும் காங்கிரஸ் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் சிவசேனாவில் இருந்து அனில் பராப், சுபாஷ் தேசாய் மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோர் மட்டுமே என்னுடன் இருந்தனர். எனது ஆட்சிக் காலத்தில் ஔரங்காபாத்தை சம்பாஜி நகர் என்றும், உஸ்மானாபாத்தை தாராஷிவ் என்றும் அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றியதில் நான் திருப்தி அடைகிறேன்” என்று உருக்கமாக பேசினார்.

ராஜினாமா அறிவிப்பு:

தொடர்ந்து பேசியவர், “முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்கிறேன்” என்று அறிவித்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அவர் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.