இலங்கை சட்டசபை தேர்தல் இந்தியாவிடம் கோரிக்கை| Dinamalar

கொழும்பு:இலங்கையில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கான சட்டசபை தேர்தல்களை விரைவில் நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அந்நாட்டை சேர்ந்த தமிழர் கட்சிகள் இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
கடந்த, 2018ல் இலங்கையில் தேர்தல் சீர்திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது எழுந்த சட்ட சிக்கல் காரணமாக ஒன்பது மாகாண சட்டசபை தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது வரை அந்த மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், அந்த ஒன்பது மாகாணங்களுக்கு உடனடியாக தேர்தல் நடத்த, அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழர் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.

இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லேவை சந்தித்த பிரதிநிதிகள் குழுவினர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதை அடுத்து, ஒன்பது மாகாண சட்டசபை தேர்தலை நடத்த இந்திய அரசும், சர்வதேச சமூகமும் நிதி உதவி அளிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முன்னுரிமை

இலங்கைக்கு இந்தியா அளித்த உறுதிமொழிப்படி, இறுதி தவணையாக கடந்த வாரம், எரிபொருள் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின், 24ம் தேதி முதல் பொதுத் துறை நிறுவனமான, சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பெட்ரோல், டீசல் வரத்து இன்றி திணறி வருகிறது.

இதையடுத்து, முன்னுரிமை அடிப்படையில் ஜூலை 10 வரை அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனப் போக்குவரத்து மட்டும் நடக்கும் என, அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் இல்லாமல் அரசு விற்பனை மையங்கள் மூடப்பட்டுள்ளன. அதே சமயம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான இலங்கை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ‘ரேஷன்’ முறையில் தனியார் வாகனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

இதற்காக ராணுவத்தினர் ‘டோக்கன்’ வழங்கி வருகின்றனர். இந்த டோக்கனுடன் ஏராளமான வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசல் நிரப்பிச் செல்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.