இந்து சமய அறநிலையத் துறையை கடுமையாக கண்டித்த உயர் நீதிமன்றம் – என்ன நடந்தது?!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள காளத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சீனிவாசன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் 26.06.2022 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கு தொடர்பான கோயிலுக்கு சொந்தமான 18 இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளில் 14 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரினார். மேலும், தமிழகத்தில் தற்போது வரை 1,100 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோயில் நிலங்களில் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்படுவதாக, வழக்குகள் தொடரப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெறும் ஊதியத்தை மட்டும் பெற்றுக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். `கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யும் வரை அறநிலையத் துறை அதிகாரி என்னதான் செய்கிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு வந்த பிறகு நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடுவது எதற்காக என்றும் கேள்வி எழுப்பினார்.

“வரலாற்றுச் சிறப்பு மிக்க பல்வேறு கோயில்கள் இன்னும் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதற்கு, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செயல்படாத நிலையே காரணம். 50 ஆண்டு காலமாக இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், இப்போது கடந்த ஓராண்டாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது. கோயில் நில குத்தகை மூலம் வருமானம் வருவதால், அது இந்து சமய அறநிலையத்துறைக்குப் பயனளிக்கும் என்பதால் தான், கோயில் நிலங்களைக் குத்தகைக்கு விட நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது” என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை மூன்று வாரங்கள் தள்ளிவைத்தனர்.

அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

இது தொடர்பாக விளக்கம் கேட்பதற்கு துறை செயலாளரைத் தொடர்பு கொண்டோம். அவர் ‘ஆணையர் அலுவலகத்தில் பேசிக்கோங்க’ என்றார். இதனையடுத்து ஆணையர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பேசும் போது, கொஞ்ச நேரம் விவாதித்துவிட்டு ஓர் எண்ணைக் கொடுத்து எஸ்.ஓ-விடம் பேசுங்கள் என்றார்கள். அந்த எண்ணிற்கு அழைத்தால் ‘அந்த எண் செயலில் இல்லை’ என்றது.

இவ்விகாரம் குறித்து சமூக செயற்பாட்டாளர் விநாயகம், “தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ், கிராமத்தில் உள்ள சிறு கோயில்கள் முதல் மதுரை, திருவண்ணாமலை, திருச்செந்தூர் போன்ற பெரிய கோயில்கள் வரை மொத்தம் 36,000 கோயில்கள் இருக்கின்றன. இதன் பராமரிப்பு அல்லது நிர்வாகத்தின் கீழ் 4,78,272 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதனை 1.கோயில் பணியாளர்கள், குருக்கள், வேலை செய்பவர்கள் உள்ளடக்கிய குடியிருப்புகள், 2 .வணிகக் கட்டடங்கள், 3.விவசாய நிலம், 4.பண்ணையிடம் என நான்கு வகைகளாக வகைமைப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இருக்கிறது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இந்து அறநிலையத்துறை, `40ஆயிரம் ஏக்கர் நிலத்தை வணிக நிறுவனங்கள், தனி நபர்கள், பணியாளர்கள் என சேர்ந்து 1,640 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அடையாளம் காண்டுள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளது.

சமூக செயற்பாட்டாளர் விநாயகம்

இதனையடுத்து கோயில் நிலத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் திட்டத்தை அறிவித்தார்கள். கடந்த எட்டுமாதமாக நடந்த பணிக்குப் பிறகு முதல் தவணையாக 3,43,647 ஏக்கர் இடம் பதிவேற்றப்பட்டது. இன்னும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நிலம் பதிவேற்றம் பண்ண வேண்டியுள்ளது. இந்த ஒரு லட்சம் ஏக்கர் இடம் தான் ரெவின்யூ ரெக்கார்டில் ஆக்கிரமிப்பாளர்கள் சொந்த பெயருக்கு மாற்றியுள்ளனர் என்று சர்ச்சையாகியிருக்கிறது. அதில் தான் 40ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ள கோயில் நிலங்களும் ஆவண ரீதியாக ஆக்கிரமித்துள்ளது என்பது குற்றச்சாட்டு. இது அடுத்தகட்ட ஆய்வுக்குப் போக வேண்டும்” என்கிறவர், “சமீபத்தில் இதே நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டுத் தளம் மீது நீதிமன்றமும், அரசாங்கமும் அவகாசம் கொடுத்து கரிசனம் காட்டியது. இந்த வழக்கில் மட்டும் ஏன் இவ்வளவு ஆவேசம்” என்கிற கேள்வியினை முன்வைக்கிறார் விநாயகம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.