மகாராஷ்டிராவில் மீண்டும் தாமரை – ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பட்னவிஸ்!

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். மேலும், தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு, அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்தார்.

இதற்கிடையே, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த உத்தவ் தாக்கரே, நேற்று, முதலமைச்சர் பதவி முதலமைச்சர் பதவி மற்றும் எம்எல்சி பதவியை ராஜினாமா செய்தார்.

இதை அடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தின் தனிப் பெரும் கட்சியாக 105 எம்எல்ஏக்கள் பலத்துடன் உள்ள பாஜக, சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவுடன், மீண்டும் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக தேவேந்திர பட்னவிசும், துணை முதலமைச்சராக, ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இன்று, பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னவிஸை, மும்பையில் உள்ள அவரது வீட்டில், ஏக்நாத் ஷிண்டே சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, இருவரும் ஒன்றாக சேர்ந்து, மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்க, ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டனர்.

ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த தேவேந்திர பட்னவிஸ், தனக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார். இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக, தேவேந்திர பட்னவிஸ் மூன்றாவது முறையாக இன்று அல்லது நாளை பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், முதற்கட்டமாக, சிறிய அளவில் அமைச்சரவை அமைக்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.