மதம் தொடர்பான கருத்து தெரிவித்த ஆபாச நடிகைக்கு கொலை மிரட்டல்

மும்பை: மதம் தொடர்பான கருத்துகளை தெரிவித்த ஆபாச நடிகை உர்ஃபி ஜாவேத்துக்கு எதிராக கொலை மிரட்டல் வந்துள்ளதால், அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்துக்களால் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் கூட கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த உதய்பூர் தையல்காரர் கன்னையா லால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆபாச பட நடிகை உர்ஃபி ஜாவேத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகளை கண்டித்து கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதற்கு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் உர்ஃபி ஜாவேத்துக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டுள்ளனர். மேலும் அவரது பெயரில் டுவிட்டரில் ட்ரோல் செய்து அவதூறு கருத்துகளை அள்ளி வீசிவருகின்றனர். இன்னும் சிலர் ‘கன்னையா லாலுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும்…’ என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள நடிகை உர்ஃபி ஜாவேத், ‘நீங்கள் உங்களது நேரத்தை சிறையில் அனுபவிக்க வேண்டியிருக்கும்’ எனக்கூறி கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட பதிவுகளை ஸ்கீரின் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும், தனக்கு எதிராக வரும் கொலை மிரட்டல் பதிவுகள் குறித்து மும்பை போலீசில் புகார் அளித்துள்ளதால், அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.