2019ம் ஆண்டு சிவசேனாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க மறுத்தது ஏன்? உத்தவ்தாக்கரே கேள்வி

மும்பை: மும்பையில் மீண்டும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ, பாஜக ஆதரவுடன் முதல்வராகி உள்ள நிலையில், கடந்த 2019ம் ஆண்டு மட்டும் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி வழங்க பாஜக மறுத்தது ஏன் என  பாரதிய ஜனதா தலைமைக்கு முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான  உத்தவ்தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். முன்னாள் முதல்வரான பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ் துணைமுதல்வராக பதவி ஏற்றுள்ளார். இது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் உத்தவ்தாக்கரே, 2019ம் ஆண்டு கூட்டணியாக தேர்தலை சந்தித்து வெற்றிபெற்ற போது, சிவசேனா முதல்வராக பதவி ஏற்க அனுமதிக்காதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளர்.

மகாராஷ்டிராவில்  கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை பா.ஜனதா – சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன. இந்த கூட்டணி பெரும்பான்மை பெற்ற நிலையில், சிவசேனா முதல்-மந்திரி பதவியை 2½ ஆண்டுகளுக்கு கேட்டது. இதனால் எற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, கூட்டணி உடைந்தது. அதையடுத்த 55 எம்எல்ஏக்களை கொண்ட சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தற்போது சிவசேனா கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவின் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ஆதரவை வாபஸ் வாங்கியதால், ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பாஜக ஆதரவுடன் சிவசேனா எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

இதுதொடர்பாக பா.ஜனதாவுக்கு முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கேள்வி கணைகளை தொடுத்துள்ளார். சிவசேனா தொண்டன் என கூறிகொள்பவரை பா.ஜனதா முதல்-மந்திரி ஆக்கி உள்ளது. ஆனால் 2019-ல் சிவசேனாவுக்கு சூழற்சி முறையில் முதல்-மந்திரி பதவி தருவது தொடர்பான ஒப்பந்தமே நடக்கவில்லை என மறுத்தது ஏன்?. அப்போது பா.ஜனதா அதற்கு ஒப்புக்கொண்டு இருந்தால் அதிகார மாற்றம் அழகாகவும், கண்ணியமாகவும் நடந்து இருக்கும்

 தற்போது அடுத்த 2½ ஆண்டுகளுக்கு கூட உங்கள் முதல்-மந்திரி இல்லை. இதில் உங்களுக்கு என்ன கிடைத்தது?. அமித்ஷாவும் நானும் பேசியது போல நடந்து இருந்தால், அதிகார மாற்றம் நல்ல முறையில் நடந்து இருக்கும். நானும் முதல்-மந்திரி ஆகி இருக்க மாட்டேன். மகாவிகாஸ் அகாடியும் அமைக்கப்பட்டு இருக்காது. 2½ ஆண்டுகளுக்கு முன் சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் முதுகில் குத்தியவர்கள், ஏக்நாத் ஷிண்டேயை சிவசேனா முதல்-மந்திரி என கூறி தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர் சிவசேனா முதல்-மந்திரி இல்லை. சிவசேனா இல்லாமல், சிவசேனா முதல்-மந்திரி இருக்க முடியாது.

நீங்கள் (பா.ஜனதா) எனக்கு துரோகம் செய்தது போல, ஆரேகாலனி விவகாரத்தில் மும்பைக்கும் செய்துவிட வேண்டாம். மெட்ரோ பணிமனை திட்டத்தை காஞ்சூர் மார்க்கில் இருந்து ஆரேகாலனிக்கு மாற்றும் புதிய அரசின் முடிவு வருத்தமளிக்கிறது. உங்களுக்கு என் மீது கோபம் இருந்தால், என் மீது காட்ட வேண்டும். மும்பையின் இதயத்தில் குத்த வேண்டாம். ஆரேகாலனி யாருடைய தனிப்பட்ட சொத்து அல்ல. மெட்ரோ பணிமனை காஞ்சூர்மார்க்கில் இருக்கட்டும். ஆரேகாலனியில் வேண்டாம். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்னுடன் உள்ளனர். ஆரேகாலனியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து உள்ளேன். வனவிலங்குகள் அந்த காட்டில் உள்ளன. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி, மக்களின் வாக்குகளை வீணாக்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.