பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் – நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டம்

“ஜூலை 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்” என்று இ.பி.எஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் ஞாயிற்றுக்கிழமை திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில், பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடு பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன்,பெஞ்சமின், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இன்று (ஜூலை 03) நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்கள். நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அதிமுக பொது்ககுழு, செயற்குழு கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக,தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும் இங்குவந்து பார்வையிட்டோம். வருகின்ற 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டப்படி வெகு சிறப்பாக எழுச்சியோடு நடைபெறும்.

சட்ட விதிகளுக்குட்பட்டு நடைபெறுகின்ற அந்த பொதுக்குழுவில், கடந்தமுறை பொதுக்குழு நிராகரித்த 23 தீர்மானங்களில், ஒருசில தீர்மானங்களைத் தவிர்த்து, மற்ற தீர்மானங்கள் நடைபெறவிருக்கின்ற பொதுக்குழுவிலே நிறைவேற்றப்படும். குறிப்பாக பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்கி, கட்சியின் அனைத்து அதிகாரங்களையும் படைத்தது பொதுச்செயலாளர் பதவி. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு என்னென்ன அதிகாரங்கள் இருந்ததோ, அந்த அனைத்து அதிகாரங்களும் அடங்கிய பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அப்பதவிக்கு, முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுக்குழு சட்டப்படி செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தவறான செய்திகளை பரப்பி வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை சுற்றி இருப்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவே பொதுக்குழு பற்றி தவறான தகவல்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார் வைத்திலிங்கம். சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் பொதுக்குழுவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அத்தனையும் செயல்பாட்டிற்கும் வரும்.” என்று நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

மேலும், “ஓ.பன்னீர்செல்வம் இரண்டு நாட்களுக்கு முன்பு நான்தான் இன்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறேன் என்று சொன்னார். ஆனால், அவருடன் இருக்கும் வைத்திலிங்கம் ஓபிஎஸ் கருத்துக்கு மாறாக இப்போது இரட்டைத் தலைமையில் சர்ச்சை நிலவுகிறது என்று சொல்கிறார். அங்கே இருக்கிற இருவருக்குமே ஒத்த கருத்து இல்லை என்பது தெளிவாகிறது” என்று நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.