அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பு பகுதியில் திடீர் துப்பாக்கி சூடு

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் தேசிய சுதந்திர தின அணிவகுப்பு நடந்து வருகிறது. அமெரிக்கா உருவான 246வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன. இல்லினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணிவகுப்பு நடந்தது.

இந்த நிலையில், அணிவகுப்பு தொடங்கிய பின்னர் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்ச உணர்வு எழுந்தது. ஐலேண்ட் பூங்காவில் கையில் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் உலா வருவதும் தெரிய வந்துள்ளது.

இதில், யாரேனும் காயமடைந்து உள்ளனரா? என்பது பற்றியோ அல்லது துப்பாக்கி சூடு நடத்திய நபர் பிடிபட்டாரா? என்பது பற்றிய தகவலையோ அதிகாரிகள் வெளியிடவில்லை. சீருடை போன்ற உடையில், தலையில் தொப்பியுடன் அணிவகுப்பு பகுதியில் கட்டிட மேற்கூரை ஒன்றில் துப்பாக்கியுடன் ஒருவர் சென்றுள்ளார். இதனை சிலர் பார்த்து உள்ளனர். இந்த தகவலை அமெரிக்க ஊடகங்களும் உறுதிப்படுத்தி உள்ளன.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து, அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அதிபர் பைடன் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான கொள்கையையும் வகுத்து வருகிறது. இந்த நிலையில், துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.