இயக்குநர் மணி ரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் மணி ரத்னம் பட உருவாக்கம் குறித்து விரிவாகப் பேசிவிட்டு, இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
மேடையில் வணக்கத்தோடு தொடங்கிய மணி ரத்னம், “என்னுடைய முதல் நன்றி கல்கிக்கு! நான் காலேஜ் படிக்கும்போது இந்தப் புத்தகத்தை படித்தேன். கிட்டதட்ட 40 வருடங்கள் ஆகின்றன. இன்னமும் இது என் மனதைவிட்டு போகவில்லை.
இது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்திருக்க வேண்டிய படம். ‘நாடோடி மன்னன்’ படத்துக்குப் பிறகு அவர் பண்ண வேண்டியது. ஆனால் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போடப்பட்டது. அவர் இப்படத்தை எங்களுக்காகத்தான் விட்டுவைத்தார் என்று இன்றுதான் எனக்குப் புரிந்தது. இது பலரின் கனவு, பலர் இதைப் படமாக்க முயற்சி செய்துள்ளார்கள். நானே 1980, 2000, 2010 என மூன்று முறை முயற்சி செய்துள்ளேன். எனவே எவ்வளவு பொறுப்புகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். இப்போது இதை செய்து முடித்தது குறித்து நான் பெருமைப்படுகிறேன். இதைச் செய்து முடிக்க ஏ.ஆர்.ரஹ்மான், ரவிவர்மன் மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் என எல்லோரும் சேர்ந்து உதவி செய்திருக்கிறார்கள். கொரோனா காலத்திலும் பாதுகாப்பு உடைகளுடன் வந்து நடித்துக் கொடுத்தார்கள். இப்படிப் பல்வேறு சிரமங்களுடன் இப்படத்தில் என்னுடன் வேலைசெய்த அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் முடித்தார்.