தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கு; இந்தி நடிகருக்கு 2 ஆண்டு சிறை.! லக்னோ நீதிமன்றம் தீர்ப்பு

லக்னோ: தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கில் பாலிவுட் நடிகரும், அரசியல்வாதியுமான ராஜ் பப்பருக்கு லக்னோ நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தி திரைப்பட பாலிவுட் நடிகரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜ் பப்பர், 1996ம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலின் போது தேர்தல் அதிகாரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வஜிர்கஞ்ச் காவல் நிலைய போலீசார் ராஜ் பப்பர் மீது வழக்குபதிவு செய்தனர். அப்போது நடந்த தேர்தலின் போது சமாஜ்வாதி கட்சி சார்பில் ராஜ் பப்பர் போட்டியிட்டார். இவ்வழக்கை விசாரித்த லக்னோ சிறப்பு நீதிமன்றம், நடிகரும் அரசியல்வாதியுமான ராஜ் பப்பருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.8,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் போது, ராஜ் பப்பர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். 1996ம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு தற்போது தீர்ப்பு வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.