அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாக அம்னெஸ்டி இந்தியாவுக்கு ரூ.52 கோடி அபராதம் – அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: அந்நியச் செலாவணி நிர்வாக சட்டத்தை மீறியதாக அம்னெஸ்டி இந்தியாவுக்கு ரூ.52 கோடியும் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஆகார் படேலுக்கு ரூ.10 கோடியும் அமலாக்கத் துறை அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரிட்டனைச் சேர்ந்த அம்னெஸ்டி இன்டர்நேஷனல், இந்தியாவில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ்(எபிசிஆர்ஏ) பதிவு பெறாத இந்திய நிறுவனங்களுக்கு, அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) மூலம் ஏராளமான நிதியை அனுப்பியது தெரியவந்துள்ளது. இது எப்சிஆர்ஏ-வை மீறும் செயல் ஆகும்.

குறிப்பாக, உள்துறை அமைச்சகத்தின் எப்சிஆர்ஏ-வின்படி அம்னெஸ்டி இந்தியா அறக்கட்டளை மற்றும் இதர அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்ட முன்பதிவு அல்லது அனுமதியை மீறும் செயல் ஆகும். அந்நியச் செலாவணி நிர்வாக சட்டத்தை (பெமா) மீறி நிதி பெற்றது குறித்து விளக்கம் அளிக்குமாறு அம்னெஸ்டி இந்தியாவுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆகார் படேலுக்கு ரூ.10 கோடி..

இது தொடர்பான புகாரை விசாரித்த அமலாக்கத் துறை தீர்ப்பாயம், பெமா விதிகளை மீறியது உறுதி செய்யப்பட்டதால் அம்னெஸ்டி இந்தியாவுக்கு ரூ.51.72 கோடியும் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஆகார் படேலுக்கு ரூ.10 கோடியும் அபராதம் விதித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.