சிவாஜி கணேசன் குடும்ப சொத்து விவகாரம்: முறிந்துபோன ஒரு திருமணப் பந்தம்தான் பிரச்னைக்குக் காரணமா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, தேன்மொழி இருவரும் தங்களது சகோதரர்களான நடிகர்கள் பிரபு, ராம்குமார் ஆகியோருக்கு எதிராக‌ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களது தந்தை சம்பாதித்த‌ சொத்தில் நியாயமாகத் தங்களுக்குச் சேர வேண்டிய பங்கு பிரித்துத் தரப்படவில்லை என நீதிமன்றத்தை நாடியுள்ள இவர்கள், சிவாஜி எழுதி வைத்ததாகச் சொல்லப்படும் உயில், மோசடியானது என்றும் கூறியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு உதாரணம் என்றால் அது சிவாஜி குடும்பம்தான். சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் ஒன்றரை ஏக்கரில் மினி வெள்ளை மாளிகை போல் வீற்றிருக்கும் ‘அன்னை இல்ல’த்தில், சிவாஜி மட்டுமல்லாது அவருடைய சகோதரர்கள் தங்கவேலு, சண்முகம் குடும்பம், தங்கை பத்மாவதி குடும்பத்தினர் என ஒரு காலத்தில் அனைவரும் ஒற்றுமையாகக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள்.

சிவாஜி குடும்பம்

சிவாஜி நடித்த சில படங்களின் படப்பிடிப்புகள் இந்த வீட்டில் நடந்திருக்கின்றன. வீட்டின் தரைதளத்தில் இருக்கும் டைனிங் ஹாலில் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள். சிவாஜியின் மகள் சாந்தி திருமணமாகிச் சென்ற பிறகும் கூட ஞாயிற்றுக் கிழமை என்றால் அனைவருக்கும் ‘அன்னை இல்ல’த்தில்தான் கூட்டாஞ் சோறு.

பிரியாணி, மட்டன், சிக்கன், மீன் என அசைவ உணவுகள் பரிமாறப்படும். ஓட்டுநர்கள், வீட்டைச் சுத்தம் செய்பவர்கள், சமையல்காரர்கள் என சுமார் முப்பது ஊழியர்கள் இந்த வீட்டிலேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர்.

இத்தகைய சிறப்புகளைப் பெற்ற அன்னை இல்லத்தில் எப்போது தொடங்கியது பிரச்னை?

சிவாஜி குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமான சிலரிடம் பேசினோம்.

“சிவாஜி குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரே குடும்பத்துல இருந்து பெண் அல்லது மாப்பிள்ளை எடுக்குற வழக்கம் இருந்தது. அதாவது சிவாஜியின் மனைவி கமலாம்மாவும் அவருடைய தம்பி சண்முகத்தின் மனைவி அலமேலுவும் அக்கா தங்கைகள். இன்னொரு தம்பி தங்கவேலுவின் மனைவி மட்டும் வேற ஒரு குடும்பம். அதாவது இந்த மாதிரி உறவு முறைக்குள் வராதவங்க.

சிவாஜி குடும்பம்

இதனால இயல்பாகவே சிவாஜி, சண்முகம் ரெண்டு குடும்பத்துக்கிடையில நல்ல நெருக்கம் உண்டு. தங்கவேலு குடும்பம் கொஞ்சம் தள்ளியே இருந்தது.

அதேபோல சிவாஜி மகள்கள் ரெண்டு பேருமே கூட அண்ணன் தம்பிகளைத்தான் கல்யாணம் செய்துக்கிட்டாங்க. சாந்தியின் கணவர் நாராயண சாமியும் தேன்மொழியின் கணவர் கோவிந்தராஜும் சகோதரர்கள்.

சிவாஜியின் சகோதரி பத்மாவதியின் கணவர் வேணுகோபால் சிவாஜிக்கு மாப்பிள்ளை முறை என்பதால் சினிமா வட்டாரமே அவரை ‘மாப்ள’ என்றுதான் அழைக்கும். அவர்தான் சாந்தி தியேட்டர் நிர்வாகத்தைக் கவனிச்சிட்டு வந்தார்.

சிவாஜி உயிருடன் இருந்தவரை உறவுகளுக்குள் சின்னச் சின்னப் பிரச்னை எழுந்தாலும், எல்லோரையும் அரவணைத்துச் சென்றார். அவரது சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டிருந்தனர்.

சிவாஜியின் மறைவுக்குப் பிறகுமே சில ஆண்டுகள் இந்தக் குடும்பங்கள் பிரச்னையை வெளிக்காட்டிக்காம அவங்கவங்க பாட்டுக்கு இருந்தாங்க‌. ஆனாலும் சிவாஜியின் இரண்டு மகள்களுக்குமே பிறந்த வீட்டுடனான அந்தப் பந்தம் கொஞ்சம் கொஞ்சமாக நழுவிச் செல்வது போலவே உணரத் தொடங்கினாங்கன்னுதான் சொல்லணும்.

சிவாஜி குடும்பம்

சிவாஜியின் தம்பி, மறைந்த சண்முகத்தின் குடும்பமும் ராம்குமார், பிரபு குடும்பத்துடன் சேர்ந்து இன்னைக்கும் ‘அன்னை இல்ல’த்தில்தான் இருக்காங்க. பிரச்னை எப்ப தொடங்குச்சுன்னா, சிவாஜியின் சில சொத்துக்களை விற்றது, சில சொத்துக்களைக் கைமாற்றியது போன்ற நிகழ்வுகளின் போதுதான்.

முதல்ல ராயப்பேட்டையிலிருந்த சிவாஜி பிலிம்ஸ் அலுவலகம் இன்னொருத்தருக்கு கைமாறுச்சு. தஞ்சாவூர் பக்கம் சிவாஜி குடும்பத்துக்கு இருந்த சில சொத்துக்கள் விற்கப்பட்டன. இந்தச் சொத்துக்கள் விற்கப்பபட்ட விவரங்கள் எதுவுமே தங்களுக்குச் சொல்லப்படலைனு சாந்தி, தேன்மொழி ரெண்டு பேருக்குமே வருத்தம்.

நிறைய நகைகள் போட்டு இவர்களது திருமணங்களை சிவாஜி நடத்தியிருந்தாலும், அப்பா சம்பாதிச்சதை அவருக்குப் பிறகு எதிர்பார்க்கிற பிள்ளைகளின் இயல்பான மனோநிலைதான் அது. இதைக் குறை கூற முடியாது.

பிரபு, ராம்குமார் ரெண்டு பேரைவிட சித்தப்பா சண்முகத்தின் குடும்பத்தினரிடம் இருந்து ரொம்பவே விலகத் தொடங்குச்சு சாந்தி குடும்பமும் தேன்மொழி குடும்பமும். சண்முகத்தின் பேரன் சமீபத்தில் ஒரு வட இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்தார். டெல்லியில நடந்த அந்தக் கல்யாணத்துக்கு சாந்தி, தேன்மொழி ரெண்டு பேர் குடும்பங்களும் அழைக்கப்படலை.

தங்களுடைய அப்பா வீட்டுல தங்களுக்கு இருக்கிறதைவிட அதிக உரிமை சித்தப்பா குடும்பத்துக்கும் அந்த வீட்டுக்கு மருமகளா வந்தவங்களுக்கும் இருக்கிறதா ஃபீல் செய்யத் தொடங்கினாங்க அக்கா, தங்கச்சி ரெண்டு பேரும்.

இதுக்கிடையில் சொந்தம் விடுபட்டுடக் கூடாதுன்னு பிரபு தன் மகள் ஐஸ்வர்யாவை தேன்மொழி மகன் குணலுக்குக் கல்யாணம் செய்து கொடுத்திருந்தார். ஆனா, இந்தத் தம்பதிகளுடைய வாழ்க்கை நல்லபடியா அமையாம சமீபத்துல ரெண்டு பேரும் விவாகரத்து வாங்கிட்டாங்க.

பிரபு, சிவாஜி, ராம்குமார்

சொத்து தொடர்பா ஏற்கெனவே பிரச்னை அனலாக் கொதிச்சிட்டிருந்த சூழல்ல, இந்த விவாகரத்தும் சேர்ந்துக்கிட, அதுக்குப் பிறகுதான் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து கோர்ட் வரைக்கும் வந்திடுச்சு” என்கிறார்கள்.

சென்னை கோபாலபுரத்தில் சாந்தி, தேன்மொழி இருவரும் அருகருகே வசித்து வரும் அந்த வீடு கூட சிவாஜியின் மனைவி கமலாம்மாள் பெயரில்தான் இருந்ததாம். ஆனால் ராம்குமார், பிரபு இருவரும் அந்த வீட்டையும் தங்களுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டதாகச் சொல்கிறது சாந்தி, தேன்மொழி தரப்பு.

`என்னென்ன தேவைகள்… அண்ணனைக் கேளுங்கள்’ என ஒரு கூட்டுக் கிளியாக உறவுகளைக் கட்டிக் காத்த சிவாஜியின் அன்னை இல்லத்தின் பெருமையை மீட்பார்களா பிரபுவும் ராம்குமாரும்?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.