மனைவியிடம் வெளிநாடு சென்றதை மறைக்க பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்தவர் கைது..!

மும்பை,

மும்பையைச் சேர்ந்த 32 வயதாகும் நபர் ஒருவர் வெளிநாடு சென்றதை தனது மனைவியிடம் இருந்து மறைப்பதற்காக பாஸ்போர்ட்டில் இருந்து சில பக்கங்களை கிழித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

அந்த நபருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. சமீபத்தில் அவர் தன்னுடைய காதலியை சந்திப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். கடந்த வியாழன் இரவு அவர், இந்தியாவுக்குத் திரும்பியபோது, ​​மும்பை விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் அவரது சமீபத்திய பயணத்திற்கான விசா முத்திரைகளைக் கொண்டிருக்க வேண்டிய பாஸ்போர்ட்டின் சில பக்கங்களைக் காணாதது குறித்து அவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில், அவர் மனைவியிடம் வேலை காரணமாக இந்தியாவுக்குள் செல்வதாக கூறிவிட்டு, தனது காதலியை சந்திக்க வெளிநாடு சென்றுள்ளார். சந்தேகமடைந்த அவர் மனைவி அவரை அழைத்தபோது, ​​​​அவரது அழைப்புகளை எடுக்கவில்லை. பின்னர் அவர் வெளிநாடு சென்றதை அவரது மனைவி தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக பாஸ்போர்ட்டில் உள்ள பக்கங்களை கிழித்துள்ளார்.

பாஸ்போர்ட்டை சேதப்படுத்துவது குற்றம் என்பது தெரியாமல் பாஸ்போர்ட்டை கிழித்துள்ளார். இந்த நிலையில் மோசடி குற்றம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.