24 மணி நேரத்திற்குள் ஒரு கோடி பார்வை கடந்த 'பொன்னியின் செல்வன்' டீசர்

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்திற்கான டீசர் நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

யு டியூபில் ஐந்து மொழிகளில் வெளியான இந்த டீசர் 24 மணி நேரத்திற்குள்ளாகவே மொத்தமாக ஒரு கோடி பார்வையைக் கடந்துள்ளது. தமிழில் இதுவரையிலும் 55 லட்சம், தெலுங்கில் 25 லட்சம், ஹிந்தியில் 16 லட்சம், மலையாளத்தில் 6 லட்சம், கன்னடத்தில் 1.5 லட்சம் என ஒரு கோடிக்கும் கூடுதலான பார்வைகள் கிடைத்துள்ளது.

டீசரைப் பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை யு டியூப் கமெண்ட்டுகளிலும், சமூக வலைத்தளங்களிலும் என விதவிதமாகக் கூறி வருகிறார்கள். இந்த தலைமுறைக்கு 'பொன்னியின் செல்வன்' பற்றியும் சோழர்களைப் பற்றியும் எடுத்துரைக்கும் ஒரு படமாக இது இருக்கும் என்பது உறுதி. டீசரில் விஎப்எக்ஸ் காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிஜக் காட்சிகள் பிரம்மாண்டமாக அமைந்து ஆச்சரியப்படுத்தியுள்ளன என்பது உண்மை.

வெளிநாட்டைச் சேர்ந்த யு டியூப் விமர்சகர்கள் இந்த டீசரைப் பார்த்து ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உள்ளதாக பாராட்டியிருக்கிறார்கள். 'லார்ட் ஆப் த ரிங்ஸ், கேம் ஆப் த்ரோன்ஸ்' போன்ற படங்களைப் போல உள்ளதாகச் சொல்கிறார்கள்.

முந்தைய பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை இந்த டீசர் முறியடிக்கும் என்பதுதான் பலரின் பொதுவான கருத்தாக உள்ளது. அது நடக்குமா என்பதற்கு செப்டம்பர் 30 வரை காத்திருக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.