குஜராத்தில் கனமழையால் ஆற்றில் சிக்கிய 16 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு: 7 பேர் உயிரிழப்பு

குஜராத்: குஜராத் மாநிலத்தில் தென் மாவட்டங்களில் அதி கனமழையால் 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால் பலாயிரம் பேர் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனர். குஜராத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது இதனால் டாங் மாவட்டத்தில் பலாயிரம் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.  டாப்பி மாவட்டத்தில் உள்ள டோஸ்வாடா அணை நிரம்பி வழிந்து வருகிறது. தொடர் மழை பெய்து வருவதால் வால்சாத் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்றும் மூடப்பட்டு இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வல்சாத்  மாவட்டத்தில் உள்ள அம்பிகா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது அப்போது ஆற்றில் சிக்கி தவித்த 16 சுற்றுலா பயணிகளை கடலோர காவல்படையினர் நீண்ட நேரம் போராடி ஹெலிகாப்டர் மூலம் அவர்களை பத்திரமாக மீட்டனர். ஜூன் 1ம் தேதி முதல் நேற்று வரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மின்னல் தாக்குதல், சுவர் இடிந்து விழுந்தது, மின்சாரம் தாக்கியது உள்ளிட்டவற்றில் சிக்கி இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். மழை  தொடரும் என்பதால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதனிடையே டாங் மாவட்டத்தின் சாபுதார சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில மக்களுக்கு அனைத்து உதவிகளும் அரசு செய்யும் என்று முதலமைச்சர் புபேந்திர பட்டேலிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.  குஜராத்தை போலவே மகாராஷ்ட்ரா மாநிலத்திலும் நாளை மறுநாள் வரை கோல்காபூர், நாசிக், புனே,  ரத்தினகிரி அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மும்பை நகருக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.