'துபாய்க்கு போக வேண்டாம்.. இங்கேயே இருங்க..!' – பசில் ராஜபக்சே தடுத்து நிறுத்தம்!

இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சகோதரர் பசில் ராஜபக்சேவை, விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

தலைநகர் கொழும்புவில் உள்ள இலங்கை அதிபர் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள், மாளிகையை முழுவதுமாக தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்து உள்ளதாக, ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். மேலும், அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே நாளை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் உறுதி அளித்துள்ளது.

திட்டமிட்டபடி கோத்தபய ராஜபக்சே ராஜினாமா – பிரதமர் அலுவலகம் உறுதி!

இந்நிலையில் இன்று, இலங்கையில் இருந்து துபாய் நகருக்கு, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்ற, அதிபர் கோத்தபய ராஜபக்சே சகோதரர் பசில் ராஜபக்சேவை, விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். நள்ளிரவு 12:15 மணி அளவில் கொழும்பு விமான நிலையத்திற்கு பசில் ராஜபக்சே வந்ததாகவும், விஐபி வரிசையில் இருந்த அவரை பொது மக்கள் அடையாளம் கண்டு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.