கனமழை – நிலச்சரிவு: மகாராஷ்டிரா, குஜராத்தில் 146 பேர் பலி!

மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில், கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 146 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், கனமழை கொட்டித் தீரத்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தை பொறுத்தவரை, தலைநகர் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் வழிந்தோடுகிறது.

பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிப்பதால், மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள கோதாவரி நதியில் எல்லை மீறி தண்ணீர் பாய்வதால் கரையோர பகுதியில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதே போல், குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தங், நவ்சரி, தபி, வல்சத், பஞ்சமஹல், கேதா, சோடா உதேபூர் ஆகிய மாவட்டங்கள் மழை காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளன. 9,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். அடுத்த 5 நாட்களுக்கு குஜராத் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில், கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல், கடந்த 10 ஆம் தேதி வரையிலான காலத்தில், கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 146 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், 83 பேரும், குஜராத் மாநிலத்தில், 63 பேரும் பலியாகி உள்ளதாக, பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதே காலத்தில், 164 விலங்குகள் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.