ம.பி: ஆற்றில் குளித்த 10 வயது சிறுவன்; கடித்து இழுத்துச் சென்று விழுங்கிய முதலை! – அதிர்ச்சி சம்பவம்

மத்தியப் பிரதேச மாநிலம், சியோபூர் என்ற இடத்தில் ஓடும் சம்பல் ஆற்றில் 10 வயது சிறுவன் ஒருவன் கரையோரம் நின்று குளித்துக்கொண்டிருந்தான். அந்நேரம் அங்குவந்த மிகப்பெரிய முதலை ஒன்று சிறுவனைக் கடித்து அவனை ஆற்றுக்குள் இழுத்துச்சென்றது. அருகில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் உடனே ஓடி வந்து சிறுவனின் பெற்றோரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். முதலை சிறுவனை ஆற்றுக்குள் இழுத்துச்சென்று அப்படியே விழுங்கிவிட்டது. கிராமத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கம்புகள், வலையின் துணையோடு சிறுவனை விழுங்கிய முதலையைப் பிடித்து ஆற்றங்கரைக்கு கொண்டு வந்தனர். போலீஸாரும், வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முதலையை வனத்துறையினர் பிடித்துச்செல்ல முயன்றனர். ஆனால் கிராமத்தினர் அதற்கு அனுமதிக்கவில்லை. அதோடு முதலையின் வயிற்றில் தங்கள் மகன் உயிரோடுதான் இருப்பான் என்றும், முதலை அவனை வெளியில் உமிழ்ந்துவிடும் என்று சிறுவனின் குடும்பத்தினர் நம்பினர். காலையில் இந்தச் சம்பவம் நடந்தது. மாலை வரை முதலையை கரையில் பிடித்து வைத்திருந்தனர். முதலையை விடுவித்தால்தான் சிறுவனை வாய் வழியாக வெளியில் விடும் என்று சிறுவனின் பெற்றோர் தெரிவித்தனர்.

பிடிபட்ட முதலை

நீண்ட நேரத்திற்கு பிறகு கிராம மக்கள் முதலையை விடுவித்தனர். முதலை சிறுவனை விழுங்கிவிட்டு, தண்ணீருக்குள் சென்றுவிட்டது. ஆனால் சிறுவனின் பெற்றோர் தங்கள் மகனை எப்படியும் முதலை விடுவித்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “சிறுவன் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துக்கொண்டிருந்தபோது அவனை முதலை விழுங்கிவிட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர். அவர்களே முதலையைப் பிடித்து வெளியில் கொண்டு வந்துள்ளனர். இது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து மக்கள் ஆற்றில் எச்சரிக்கையுடன் குளிக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.