ஹிட் லிஸ்டில் 200 பொறியியல் கல்லூரிகள்; ஜூலை 16 டெட்லைன்: அண்ணா பல்கலை கறார்

Anna University says affiliated colleges to fulfil infrastructure before deadline: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகள் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஜூலை 16 ஆம் தேதிக்குள் ஏற்படுத்தாவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா? ஆய்வக வசதி உள்ளதா? தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ளனரா? என பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. இது வழக்கமாக நடக்கின்ற ஒன்று என்றாலும், கடந்த 2 ஆண்டுகளாக நேரடி ஆய்வு செய்யப்படாத நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு நேரடி ஆய்வை நடத்தியது. இதில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத, குறைந்த பட்சம் 225 பொறியியல், கட்டிடக்கலை, எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியது.

இதையும் படியுங்கள்: 310 பொறியியல் கல்லூரிகளில் என்ன பிரச்னை? மாணவர் சேர்க்கை பாதிக்குமா?

இந்தநிலையில், ஜூலை 16 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால், பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், “ஜூலை 16க்குள் முரண்பாடுகளை நீக்கி இணக்க அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கல்லூரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அதன்பின், அறிக்கையின் உண்மைத்தன்மையை சரிபார்க்க எங்கள் குழுக்கள் மற்றொரு சுற்று ஆய்வு நடத்தும். அறிக்கைக்கும் உண்மைக்கும் இடையில் ஏதேனும் வேறுபாடு இருப்பதைக் கண்டறிந்தால், தவறு செய்யும் கல்லூரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார்.

மேலும், “தேவைக்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட சில கல்லூரிகளை செயல்பட அனுமதிக்க முடியாது. இரண்டாம் கட்ட ஆய்வின் போது பற்றாக்குறை நீடித்தால், அத்தகைய கல்லூரிகளின் இணைப்பு ரத்து செய்யப்படும்,” என்றும் துணைவேந்தர் கூறினார்.

“குறைபாடுகளை சரி செய்யாமல், பெயருக்காக மட்டுமே இணக்க அறிக்கைகளை தாக்கல் செய்வது கல்லூரிகளின் வழக்கமான நடைமுறை. அதன் பிறகு, அவர்களின் இணைப்பு புதுப்பிக்கப்படும். ஆனால் இந்தமுறை அதற்கு வாய்ப்பில்லை. தவறு செய்யும் கல்லூரிகளை தண்டிக்க பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது” என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

”கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் மற்றும் ஆய்வகங்கள் இல்லாததற்கு தனியார் கல்லூரிகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தொற்றுநோயின் போது, ​​​​வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைனில் நடத்தப்பட்டன, எங்களுக்கு அதிக ஆசிரியர்கள் தேவைப்படவில்லை. அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை, அதனால் பல கல்லூரிகள் பல ஆசிரியர்களை நீக்கியது. இவ்வளவு குறுகிய கால அவகாசத்தில் ஆசிரியர்களை பணியமர்த்துவது கடினம். எனவே, இணக்க அறிக்கையை தாக்கல் செய்ய எங்களுக்கு அதிக கால அவகாசம் வேண்டும்” என கல்லூரிகள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.