ஓட்டு பெட்டி, மை உள்ளிட்ட ஜனாதிபதி தேர்தல் பொருள் மாநிலங்களிடம் ஒப்படைப்பு; அதிகாரிகள் சென்னை கொண்டு வந்தனர்

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான பெட்டிகள், மை உள்ளிட்ட உபகரணங்கள், மாநில தேர்தல் அதிகாரிகளிடம் டெல்லியில் தேர்தல் ஆணையம் ஒப்படைத்துள்ளது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் இதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், அந்தந்த மாநிலங்களை சேர்ந்த எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு தேவையான ஓட்டு பெட்டிகள், வாக்களிப்பதற்கு தேவையான சிறப்பு பேனா, வாக்குச்சீட்டு, தேர்தல் முத்திரை உள்ளிட்ட உபகரணங்கள் போன்றவை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அந்தந்த் மாநில தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநில தேர்தல் அதிகாரிகளிடம் இவை  ஒப்படைக்கப்பட்டன.  தமிழகத்தின் சார்பில் தமிழக தேர்தல் துணை அதிகாரி தர், தமிழக சட்டப்பேரவை துணைச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அவற்றை அவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு எடுத்துச் சென்றனர். அங்கிருந்துல பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சட்டப்பேரவைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.