கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிக்கு உதவும் தியோகர் விமான நிலையம் திறந்து வைத்தார் மோடி; 12 கிமீ வாகனத்தில் பேரணி

தியோகர்: ‘புதிய விமான நிலையம் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தியோகரில் 12 கிமீ தூரத்துக்கு பிரதமர் மோடி வாகனத்தில் ஊர்வலமாக  சென்ற அவர், 657 ஏக்கர் பரப்பளவில் ரூ.401 கோடி மதிப்பில் கட்டப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர்,  ரூ.16,800 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் மோடி பேசுகையில், ‘‘தியோகர் புதிய விமான நிலையத்தின் மூலமாக ஜார்கண்டில்  சுற்றுலாத்துறை மேம்படும். இதன் மூலம், புதிய வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த விமான நிலையம், கிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும். பொகாரோ -அங்குல் எரிவாயு குழாய் திட்டம் மூலம் 11 மாவட்டங்கள் பயன்பெறும். புதிய திட்டங்கள் மூலமாக பீகார், மேற்கு வங்க மக்களும் பயன் பெறுவார்கள். ரயில்வே, சாலை மற்றும் விமானப்பாதைகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக கடந்த 8 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.