அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மீன் வலை உற்பத்தி நிறுவன நிர்வாகியும், ஜெயக்குமார் மருமகனின் சகோதரனுமான மகேஷுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணைப்பிறப்பித்தது.
சென்னை : துரைப்பாக்கம் பகுதியில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நிலம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை எழுந்துள்ளது.
இந்த தகராறில், ஜெயக்குமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக வும் மகேஷ் புகார் அளித்தார்.
மகேஷ்-ன் புகார் அடிப்படையில் ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே, “எனது நற்பெயரும், நன்மதிப்பும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், அவதூறான கருத்துக்களை மகேஷ் வெளியிட்டதற்காக மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், என்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணையை செய்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அவர்கள், ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துகளை மகேஷ் வெளியிட தடை விதித்து, வழக்கு குறித்து இரண்டு வாரங்களில் மகேஷ் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.