தமிழக உள்ளாட்சித் தேர்தலில் விளம்பர விதிமுறை மீறல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி; கடும் சட்டம் கொண்டு வர பரிந்துரை

புதுடெல்லி: தமிழக உள்ளாட்சி தேர்தலில் சட்ட விதிமுறைகளை மீறி ஒரு சில கட்சிகள் விளம்பரங்களை பிரசுரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடந்தாண்டு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்  நடத்தப்பட்டது. அதே மாதம் 22ம் தேதி முடிவுகள் வெளியானதில், திமுக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், எம்.எல்.ரவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘தமிழகத் உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு தினத்தன்று கூட சில கட்சிகள் விளம்பரம் வெளியிட்டன. இது அரசியல் சாசனத்திற்கு எதிரான என்பதால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்,’ என தெரிவிதிருந்தார். நீதிபதிகள் யு.யு.லலித், ரவீந்திர பட், சுதஷ்னு துலியா அமர்வு நேற்று இதை விசாரித்து, ‘நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களில் இருப்பது போன்று உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் சட்ட விதிமுறைகள் கிடையாது. அதனால், அது குறித்த சட்டங்களை கடுமையாக்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்கிறோம். இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை,’ எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.