ஸ்பெயின் நாட்டில், சென்ற வாரம், விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவல் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட இந்திய வம்சாவளிச் சிறுவன் முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளான்.
லண்டனிலிருந்து ஸ்பெயின் தீவான Menorca தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்றை திடீரென நெருங்கிய போர் விமானங்கள் இரண்டு அந்த விமானத்தை தரையிறக்க, பயணிகளை வெளியேற்றப்பட்டு அவர்களுடைய உடைமைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
பெரும் பரபரப்பையும், தேவையில்லாத பணச் செலவையும், அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கிய இந்த சம்பவத்தின் பின்னணியில், தன் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுகொண்டிருந்த ஒரு இந்திய வம்சாவளி சிறுவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் ஒன்று இருப்பது தெரியவந்தது. ஆனால், விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லாததால், அந்த மிரட்டல் போலியானது என தெரியவந்தது.
ஆதித்யா வர்மா (Aditya Verma, 18) என்ற அந்த பதின்ம வயதுச் சிறுவன், மருத்துவரான தனது தாயுடன் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறான், நன்றாகப் படிக்கக்கூடிய அந்தச் சிறுவன், ஒரு செஸ் இளம் மேதையும் கூட.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு Menorcaவிலுள்ள சிறையில் அடைக்கப்பட்ட ஆதித்யா, தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறான். அவன் தன் வீட்டுக்குச் செல்வதில் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என Menorca அதிகாரிகள் கூறிவிட்டதைத் தொடர்ந்து அவன் பிரித்தானியா வந்தடைந்துள்ளான்.
இரு நாடுகளில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தக் காரணமாக இருந்த ஆதித்யா முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளான்.
நான் செய்தது, சற்றும் யோசிக்காமல் செய்த பைத்தியக்காரத்தனமான செயல், என்னால் உருவான பிரச்சினைக்காக வருந்துகிறேன், அதை ஒரு வேடிக்கைக்காகத்தான் செய்தேன், என்னால் என் நண்பர்களின் விடுமுறை வீணாகிப்போனதற்காக வருந்துகிறேன்.
விமானத்தில் பயணித்த யாரையும் பயமுறுத்துவதற்காக நான் அதைச் செய்யவில்லை. நானும் என் நண்பர்களும் விமானத்தில் ஏறும்போது, நம்மில் யாரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிடப்போகிறார்கள்? என நாங்கள் வேடிக்கையாக பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போதுதான், நான் ஸ்னாப்சாட்டில், நான் இந்த விமானத்தை வெடிக்கச் செய்யப்போகிறேன், நான் ஒரு தாலிபான் என ஒரு செய்தியை என் நண்பர்களுக்கு அனுப்பினேன். என் நண்பர்கள் விமான நிலைய வைஃபையை பயன்படுத்தியதால், அந்த செய்தி பாதுகாவலர்களின் கவனத்திற்கு எட்ட, நான் கைது செய்யப்பட்டேன், அப்படி ஒரு செய்தியை நான் ஏன் அனுப்பினேனோ என்று இப்போது வருந்துகிறேன் என்று கூறியுள்ளார் ஆதித்யா.
இந்நிலையில், இந்த வழக்கை பிரித்தானியாவுக்கே அனுப்பலாமா என்பது குறித்து ஸ்பெயின் அதிகாரிகள் அடுத்த சில வாரங்களில் முடிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.