பொன்னையன் ஆடியோ: நடந்தது என்ன? அதிர்ச்சியில் அ.தி.மு.க தலைவர்கள்

ADMK senior leader C. Ponnaiyan audio controversy Tamil News: அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பொன்னையன் அதிமுக தலைவர்களை விமர்சித்து பேசுவதாக தொலைபேசி உரையாடல் ஒன்றை பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். இது எடப்பாடி பழனிசாமி தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அந்த ஆடியோவில் பொன்னையன் கன்னியாகுமரி மாட்டத்தை சேர்ந்த நாஞ்சில் கே.எஸ். கோலப்பன் என்பவரிடம் பேசுகிறார். அதில் அவர் தொண்டர்கள் இரட்டை இலை பக்கம் என்றும், தலைவர்கள் தங்களின் பணத்தை காப்பற்ற ஓடுகிறார்கள். யாருக்கும் கட்சியின் மீது அக்கறையில்லை என்றும் கூறுகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வெளியிட்ட இந்த ஆடியோ பெரும் சர்ச்சையையும் அதிமுகவினர் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந் நிலையில், இந்த சர்ச்சையான ஆடியோ குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் மறுப்பு தெரிவித்து பேசியுள்ளார்.

பொன்னையன் விளக்கம்…

இது தொடர்பாக அவர் கூறுகையில், “அதிமுக நிர்வாகி கோலப்பன் உள்பட யாரிடமும் நான் பேசவில்லை. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என் குரல் மிமிக்ரி செய்யப்பட்டுள்ளது. வெளியான ஆடியோ போலியானது. எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உள்ளது.

திமுக இனி ஆட்சிக்கு வரவே முடியாது என்ற அளவுக்கு எடப்பாடி பழனிசாமி புகழ் உயர்ந்துள்ளது. எடப்பாடி ஒரு அறிவு பெட்டகம், வழி நடத்த வேண்டிய நிலையில் அவர் இல்லை. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்ததாக ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டில் உண்மை இல்லை. 98 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

ஆனால், பொன்னையன் தன்னுடன் தான் பேசினார், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருக்கிறது என்று அதிமுக நிர்வாகி நாஞ்சில் கே.எஸ். கோலப்பன் தெரிவித்துள்ளார்.

நாஞ்சில் கே.எஸ். கோலப்பன் பேட்டி

இது குறித்து அவர் பேசுகையில், “பொன்னையன், தலைவர் காலம் முதல் அதிமுகவில் இருக்கும் மூத்த தலைவர். அவர் மீது எனக்கு மிகுந்து மரியாதையை உண்டு. தலைவரின் வீரமிக்க தொண்டராக அவர் இருந்தார். அவர் மிமிக்ரி செய்ய வேண்டிய அவசியமில்லை.

பொன்னையன் ஜூலை 9ம் தேதி இரவு 9.59 மணிக்கு என்னுடன் பேசினார். சுமார் 17 நிமிடம் 28 வினாடிகள் என்னிடம் பேசியிருக்கிறார். இந்த விஷயங்கள் வெளியில் வர வேண்டும் என்பதற்காகவே அவர் பேசியிருக்கிறார். அவரை அவமானப்படுத்துவதற்காக நான் இதை வெளியிடவில்லை. நான் தீவிரமான ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என்று அவருக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.

ஆஸ்பயர் சுவாமிநாதன் கருத்து…

இது தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி ஆஸ்பயர் சுவாமிநாதன் பேசுகையில், “பொன்னையன் கூறிய அனைத்தும் உண்மைதான். அதைத்தான் கோலப்பனிடம் பகிர்ந்து இருக்கிறார். பொன்னையன் குரல் மிமிக்ரி செய்யப்பட்டுள்ளதாக கூறுவது சுத்த பொய். அப்படி உண்மை என்றால் கோலப்பன் மீது பொன்னையன் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுக்க வேண்டும்.

சர்ச்சைக்கு என்றே பெயர் போனவர் பொன்னையன். அவர் ஓபிஎஸ்-இடம் பேசிய ஆடியோ ஒன்று என்னிடம் உள்ளது. அதில் அவர் ஐகோர்ட்டில் ஸ்டெ ஆடர் வாங்க சொல்கிறார். இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியை அடக்க முடியாது என்று கூறுகிறார்.

பொன்னையன் அதிமுக தலைவர்கள் குறித்து கூறியதாக வெளியாகியுள்ள ஆடியோ குரல் அவருடையது தான். அது அவரது எண்ணங்கள் தான். அந்த எண்ணங்கள் அனைத்தும் உண்மைதான். மேலும் பலர், எடப்பாடி பழனிசாமியை கெட்ட வார்த்தைகளால் வசைபாடிய ஆடியோக்களும் என்னிடம் உள்ளது. அதில் அவர்கள், இந்த தலைமை கோடி கோடியாய் பணத்தை கொள்ளையடித்து விட்டனர் என்றும் வழியே இல்லாமல் இந்த கட்சியில் இருக்கிறோம் என்றும் கூறுகிறார்கள். எல்லாமே உண்மையான கால்ஸ் தான்.

இதுபோன்ற ஆடியோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக, அடுத்த சில நாட்களில், வாரங்களில் வெளி வரத் தான் போகிறது. அதையும் நாம் பார்க்கத்தான் போகிறோம். ஆனால், இது மாடுலேஷனோ, டெக்னலாஜியோ அல்ல. இது பொன்னையன் குரல் தான்.” என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.