உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி டேவிட்சனுடன் மோதும் அண்ணாமலை: பின்னணி என்ன?

Arun Janardhanan 

TN BJP takes battle against intel chief to Raj Bhavan, seeks NIA probe in passport case: தமிழக உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் தொடர்பான போலி பாஸ்போர்ட் வழக்கை பயங்கரவாத தடுப்பு மத்திய அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) விசாரிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க கட்சி தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியுள்ளது.

மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ஏ.டி.ஜி.பி டேவிட்சன், தமிழகத்தில் உள்ள பா.ஜ.க தலைவர்கள் மற்றும் இந்துத்துவா அமைப்புகளிடம் இருந்து அடிக்கடி எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்: கே.பி முனுசாமி, பொன்னையனுக்கு புதிய பதவி: எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட பட்டியல்

ஜூலை 12, 2022 தேதியிட்ட, ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலை, சில இலங்கை குடிமக்கள் சம்பந்தப்பட்ட போலி பாஸ்போர்ட் வழக்கின் விசாரணையைத் தடுத்ததாகக் குற்றம் சாட்டி, ஏ.டி.ஜி.பி டேவிட்சன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

மதுரை நகருக்கு அருகில் உள்ள மதுரை அவனியாபுரம் காவல் நிலையப் பகுதியில் போலி ஆவணங்கள் மூலம் மொத்தம் 53 பாஸ்போர்ட்டுகள் பெறப்பட்டுள்ளதாக அண்ணாமலையின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஜூன் 2019 மற்றும் ஜனவரி 2020 முதல், போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியதாகக் கூறி இந்திய விமான நிலையங்களில் சில இலங்கை குடிமக்கள் கைது செய்யப்பட்ட இரண்டு நிகழ்வுகளை அண்ணாமலையின் கடிதம் மேற்கோள் காட்டியுள்ளது. இந்த விவகாரத்தில், IPC பிரிவுகள் 120(b), 420,465, 468, மற்றும் 471 மற்றும் பிரிவுகள் 12(IA) (a), 12 (IA) (b) மற்றும் 1967 பாஸ்போர்ட் சட்டம் 12(2) ஆகியவற்றின் கீழ் நான்கு பேர் மீது காவல்துறை தானாக முன்வந்து எப்.ஐ.ஆர் பதிவு செய்தது.

தமிழக பா.ஜ.க தலைவரின் கடிதத்தின்படி, தமிழக சி.ஐ.டி-யின் க்யூ-பிராஞ்ச் நடத்திய இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி பாஸ்போர்ட் அதிகாரிகள் மற்றும் தபால் துறையும் சிக்கியுள்ளது. பின்னர், இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது, அப்போது 175 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாகவும், 22 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டதாகவும், 3 போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. ஜனவரி 2021 இல், மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறு கியூ-பிராஞ்சிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

உளவுத்துறை-உள் பாதுகாப்பு ஐ.ஜி., ஈஸ்வரமூர்த்தி நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் ஆராயப்பட வேண்டிய அதிகாரிகளில் ஒருவர் டேவிட்சன் ஆசீர்வாதம் என்று கூறப்பட்டதால், வழக்கு விசாரணை தடைப்பட்டதாக அண்ணாமலையின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், டேவிட்சன் தேவாசீர்வாதத்தை விசாரிக்க அனுமதி கோரிய காவல்துறையின் கடிதம் தமிழக உள்துறையிடம் நிலுவையில் உள்ளது என்று குற்றம் சாட்டிய அண்ணாமலை, “இந்த வழக்கில் சிக்கியவர்களின் தொடர்பு காரணமாக விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது தெளிவாகிறது” என்றும் கூறினார்.

விசாரணையில் அதிக காலதாமதத்தால் “முக்கிய ஆதாரங்கள்” அழிக்கப்பட்டிருக்கும் என்று கருதிய அண்ணாமலை, ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கில் என்.ஐ.ஏ அல்லது சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார். மேலும், இந்த விவகாரம் “தற்செயலாக விசாரணை” செய்யப்பட்டு வருகிறது மற்றும் நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை “மீறிவிட்டது” என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

பல போலி கடவுச்சீட்டுகளை (பாஸ்போர்ட்களை) வழங்கியதில் டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் “நேரடி தொடர்பு” இருப்பதாக அண்ணாமலையின் குற்றச்சாட்டை காவல்துறை மற்றும் தமிழக உள்துறை வட்டாரங்கள் மறுத்தன.

“அப்போது மதுரை கமிஷனராக பணியாற்றியதற்காக டேவிட்சன் தேவாசீர்வாதம் குறி வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், ஒரு பாஸ்போர்ட் சரிபார்க்கப்பட வேண்டியிருக்கும் போது, ​​தகவல் உள்ளூர் புலனாய்வு பிரிவுக்கு அனுப்பப்படும், பின்னர் அது உள்ளூர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்படும், அங்கு சரிபார்க்கும் செயல்முறை ஒரு ஜூனியர் அதிகாரியால் செய்யப்படுகிறது. தனிப்பட்ட சரிபார்ப்பிற்காக தனிநபரை சந்திப்பது, அவரது சான்றிதழ்களை நேரில் ஆய்வு செய்தல் மற்றும் ஏதேனும் குற்றப் பதிவுகளை இருமுறை சரிபார்த்தல் ஆகியவை சரிபார்ப்பு நடைமுறையின் ஒரு பகுதியாகும். ஒரு நகர போலீஸ் கமிஷனர் இந்த சரிபார்ப்பு செயல்பாட்டில் ஈடுபடுவதில்லை, அவருக்கு கீழ் உள்ள கமிஷனர்களும் ஈடுபடுவதில்லை, இருப்பினும் மொத்த சரிபார்ப்புகளின் எண்ணிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு அவ்வப்போது அறிக்கைகள் அளிக்கப்படும், ”என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.

“வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா ஒரு போக்குவரத்துப் புள்ளியாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இங்கு வசிக்கும் பல அகதிகள் உள்ளூர் ரேஷன் கார்டுகள், அடையாள அட்டைகள் அல்லது பிற அடிப்படைச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி போலி பாஸ்போர்ட்டைப் பெற முயற்சித்து வருகிறார்கள். இவை எங்கள் அமைப்பில் உள்ள குறைபாடுகள், இது தொடர்பாக ஆட்சேபனைகள் அல்லது புகார்கள் எழுப்பப்படாவிட்டால், நேரடி சரிபார்ப்பு செய்யும் ஒரு போலீஸ் அதிகாரி அவற்றை கண்டுபிடிக்க முடியாது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை அல்லது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும். மாநில அளவில், ஒவ்வொரு மாவட்டம் மற்றும் நகர அளவில் டஜன் கணக்கான போலி பாஸ்போர்ட் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கமிஷனரை அதில் இழுப்பது முட்டாள்தனமானது, ”என்று தமிழக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

இதற்கு முன்னரும் பா.ஜ.க டேவிட்சன் தேவாசீர்வாதத்தை குறிவைத்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில், அண்ணாமலை தனது தொலைபேசி அழைப்புகளை தமிழக உளவுப்பிரிவு கவனித்து வருவதாகவும், மாநில புலனாய்வு குழு தனக்கு எதிராக “தனிப்பட்ட தாக்குதல்களை” அதிகரித்து வருவதாகவும், அதை நிரூபிக்க தன்னிடம் “வாட்ஸ்அப் அரட்டைகளின் ஸ்கிரீன்ஷாட்கள்” இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், தமிழக காவல் துறை முழுவதையும் உளவுத் துறை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநில காவல்துறை தலைவராகச் செயல்படுவதாகவும் கூறினார்.

ஒரு இந்துத்துவா அமைப்பினர் சமீபத்தில் டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு எதிராக வகுப்புவாத அவதூறுகளைச் செய்தனர், அவரை “மத வெறியர்” என்று அழைத்த ஒரு வீடியோ இந்துத்துவா குழுக்களில் வைரலாகியது.

இந்து கோவில்களுக்கு எதிரான தி.மு.க அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் திருச்செந்தூரில் ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள இந்துக்களை குறிவைப்பது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அல்ல டேவிட்சன் தேவாசீர்வாதம் என்று குற்றம்சாட்டினார்.

சுப்பிரமணியன் தனது உரையில், “கோவில்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஸ்டாலின் இயக்குகிறார் என்று நம்ப வேண்டாம். இதற்கெல்லாம் பின்னால் இருப்பது யார் தெரியுமா? உளவுத்துறையில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் பெயர் என்ன? டேவிட்? டேவிட்சன்! ஆம்… ஸ்டாலினுக்கும் காவல்துறைக்கும் தெரிவிக்க இந்த வாய்ப்பை எனக்கு அனுமதியுங்கள் – தற்போது உங்கள் உளவுப் பிரிவின் பொறுப்பில் ஒரு மதவெறியர் இருக்கிறார். நாம் பார்த்த உளவுத்துறை அதிகாரிகளில் அவரைப் போல் யாரும் இருந்ததில்லை. மற்ற உளவுத்துறை அதிகாரிகளைப் போலல்லாமல், ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் வேலைக்கு வருவதை விட தேவாலயத்திற்குச் செல்வார்,” என்று பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.