ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: கர்நாடக கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில், அதனை கண்டித்து இந்து மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு கல்லூரிகளில் வன்முறை வெடித்ததால் கல்லூரிகள் மூடப்பட்டன.

இதையடுத்து உடுப்பியை சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் சிலர், ஹிஜாப் தடையை நீக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த விசாரித்த நீதிமன்றம் கடந்த மார்ச் 15-ம் தேதி, “ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என தீர்ப்பு வழங்கியது.

இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கடந்த ஏப்ரலில் இவர்களின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் ஆஜராகி, “கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது. முஸ்லிம் மாணவிகளின் கல்வி தொடர்பான இந்த மனுவை உடனே விசாரிக்க வேண்டும்” என நினைவூட்டினார்.

இதை ஏற்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “ஹிஜாப் தடை தொடர்பான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. அடுத்த வாரத்தில் பொருத்தமான அமர்வு அதனை விசாரிக்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.