மீண்டும் நேரலையில் நித்தியானந்தா…. சமாதி நிலையிலிருந்து மீண்டு அருளாசி….

3 மாத கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் நேரலையில் தோன்றி தனது பக்தர்களுக்கு அருளாசி தந்தார் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா. சமாதி நிலையில் இருந்து எழுந்து வந்ததாக கூறிய அவர், இந்த 3 மாத காலம் தனக்கு ஒரு யுகமாக கழிந்ததாகவும் தெரிவித்தார்.

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியாரான நித்தியானந்தா இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அவ்வப்போது இணையதளத்தில் நேரலையில் தனது பக்தர்களுக்கு அருளாசி தந்து வந்த நித்தியானந்தா திடீரென 3 மாத காலமாக காணாமல் போனார். முதலில் உடல் நலக்கோளாறு என்றும் பின்னர் அவர் சமாதி நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. மேலும், அவரது உடல்நலம் குறித்து வேறுபல வதந்திகளும் உலா வந்தன.

இந்நிலையில், சமாதி நிலையில் இருந்து பேசுவதாக கூறி சில தகவல்களை வலைதளத்தில் பதிவிட்ட நித்தியானந்தா, குருபூர்ணிமா தினமான ஜுலை 13 ஆம் தேதி பக்தர்களுக்கு நேரலையில் தோன்ற போவதாக அறிவித்தார்.

அதன்படி, நேற்றிரவு நேரலையில் தோன்றிய நித்தியானந்தா, இன்றிலிருந்து 42ஆவது சாதுர்மாசியத்தை தொடங்குவதாக கூறினார். முதலில் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கிய நித்தியானந்தா பின்னர், கைலாசா தனிநாட்டிற்கு ஆதரவாகவும், துணையாகவும் இருந்த தனது பக்தர்கள் மற்றும் சீடர்களுக்கு தமிழில் நன்றி தெரிவித்தார்.

அழியாத ஒன்றின் மீது ஈர்ப்பு வந்துவிட்டாலே பரமசிவன் நமக்குள் வந்து விடுவார் என்றும் அந்த பக்தியில் கரையும் நிலைதான் சமாதி நிலை என்றும் நித்தியானந்தா விளக்கம் அளித்தார். 

கடந்த 3 மாதகாலம் தனக்கு ஒரு யுகமாக கழிந்தது என்றும் தற்போது தனது உடல், மூளை அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினார். 

நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது போல் நேரலையில் தோன்றிய நித்தியானந்தா, எதிர்வரும் நாட்களில் மேலும் பல புதிய சுவாரஸ்யங்களை வெளியிட்டு கலகலப்பூட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது…..

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.