சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு – அய்யப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்!

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ளது, சபரிமலை அய்யப்பன் கோவில். இந்தக் கோவில், உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது, நோய்த் தொற்று குறைந்துள்ளதால், தளர்வுகளும் அளிக்கப்பட்டு உள்ளன.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு சீசளை தவிர ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்திற்கு இணையான தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம், மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என்பதால் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். தொடர்ந்து 5 நாட்கள் (அதாவது ஜூலை 21 ஆம் தேதி வரை) ஆடி மாத சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.