இலங்கை | கோத்தபய ராஜபக்ச ராஜினாமாவை வீதியில் இறங்கி கொண்டாடி மகிழ்ந்த மக்கள்

கொழும்பு: அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அதனைக் கொண்டாடும் விதமாக இலங்கை மக்கள் திரளாக வீதிகளில் கூடி அதனை கொண்டாடி மகிழ்ந்தனர். கோத்தபய ராஜினாமா செய்ததை உறுதி செய்துள்ளார் நாடாளுமன்ற சபாநாயகர் யப அபேவர்தனா.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் மக்கள் உணவு, எரிபொருள், மருந்து மாத்திரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்கள் அந்த நாட்டின் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராடினார். தொடர்ந்து மாளிகைக்குள் நுழைந்தனர்.

அந்த சமயத்தில் நாட்டை விட்டு தனது மனைவியுடன் தப்பினார் அதிபர் பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்ச. முதலில் மாலத்தீவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இப்போது சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பி உள்ளார். இதனை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் யப அபேவர்தனா தெரிவித்துள்ளார்.

மறுபக்கம் அவரது ராஜினாமா கடிதம் சமூக வலைதளங்களில் வியாழன் அன்று பின்னிரவு வைரலாகி உள்ளது. அதனை அறிந்து இலங்கை மக்கள் வீதிகளில் பெருந்திரளாக கூடி கொண்டாடி தீர்த்துள்ளனர்.

கொழும்பு நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதனையும் மீறி பட்டாசுகளை வெடித்தும், கோஷங்களை எழுப்பியும், ராஜபக்சவின் முதல் பெயரை கேலி செய்யும் வகையிலும் முழக்கங்களை எழுப்பி கொண்டாடி இருந்தனர் மக்கள். தங்களுக்கு சிறந்த நிர்வாகத் திறன் மிக்க ஆட்சியாளர்கள் பதவி ஏற்க வேண்டும் என ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டின் இந்த நிலைக்கு காரணம் ராஜபக்ச மற்றும் அவரது கூட்டாளிகள் தான் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.